சனி, 11 நவம்பர், 2023

நீலவானப் பறவை -7

 விஜய் அங்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. அவன் தனது அறையில் தனது புதிய மொபைல் போனுடன் பெரும்பாலான நாட்களைக் கழித்தான்.


வருண் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிய பிறகு, மாலையில் தான் அறையை விட்டு வெளியில் வருவான். ஆனந்தியின் முன்னிலையில் அவன் நிறைய வெட்கப்பட்டான். அதனால் அவளுடன் தனியாக இருப்பதைத் தவிர்த்தான். 


அவளும் அதை கவனித்தாள். ஒருவேளை அவனது வயதும், அந்த வயதுக்குரிய ஹார்மோன்களும் அதற்கு காரணமாக இருக்கும் என்று அவள் யூகித்தாள். இதை அவள் வருணிடமும் சொன்னாள்.


மெதுவாக அந்தக் குடும்பத்துடன் பழக ஆரம்பித்தான் விஜய். மொபைல் போன், லேப்டாப் பயன்படுத்துவதை வருண் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.


விஜயுடன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றனர். அவனது எலும்பு முறிவைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து காயங்களும் குணமடைந்திருந்தன.


அவனது கைக் கட்டை அகற்ற ஒரு மாதம் ஆகும் என்று மருத்துவர் கூறினார். அதுவரை அவன் இப்படியே இருக்க வேண்டும். 


இதைக் கேட்ட விஜய்க்கு கோபம் வந்தது. ஆனால் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்துவிட்டான்.!!


அன்று மாலை, வருண் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டில் விஜய் இல்லை. 


கதவைத் திறந்த அவன் மனைவி ஆனந்தி பளிச்சென இருந்தாள். 


காபி கொடுத்த அவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்து அணைத்துக் கொண்டு விஜயைப் பற்றி கேட்டான். 

"அவன் எங்கே?"


 "அவன் பார்க்குக்கு போறேனு சொல்லிட்டு போனான்" என்றாள்.


"எப்படி இருக்கான்?"


"ரூமை விட்டு வெளியே வர்றதும் இல்ல. பேசுறதும் இல்ல. மனசளவுல ரொம்ப கஷ்டத்துல இருக்கான் போல"


"அவனால உனக்கு ஏதாவது சிரமமா?" மீண்டும் கேட்டான்.


"சே சே.. அதெல்லாம் ஒண்ணுமே இல்ல. உண்மைய சொன்னா அவன் என்கூட பேசினா எனக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்.. ஆனா எங்க.. அவன் என்னை கண்டாலே ஓடி ஒளிஞ்சிர்றான். ரொம்ப ஷை டைப்" என்று சிரித்தாள்.


அவள் கழுத்தில் கன்னத்தில் எல்லாம் தாராளமாக முத்தமிட்டு, 

"சரி.. நீ டிபன் பண்ணி வெய். நான் போய் அவன்கிட்ட ப்ரீயா பேசிட்டு வரேன்" எனச் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான். 



****


மாலை நேரச் சூரிய அஸ்தமனத்தில் பூங்கா அழகாகத் தெரிந்தது. குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்கார்ந்து அவர்களை வேடிக்கை பார்த்தார்கள்.


ஒரு மூலையில் இருந்த பெஞ்சில் விஜய் தனியாக அமர்ந்திருப்பதை வருண் கண்டான். 


அவன் கவலையுடன் காணப்பட்டான். தன்னை நோக்கி வந்த வருணைப் பார்த்த  அவனது புருவம் சுருங்கியது.


 வருண் அவனருகில் சென்று அமர்ந்தான்.

"என்ன விஷயம்?" மெல்லக் கேட்டான்.


ஒன்றுமில்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான். 


"சொல்லு, உனக்கு என்ன கஷ்டம்?"


சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, "நான் எதுவும் செய்யாம இருக்கறது என்னைக் கொல்லுது" என்றான் விஜய்.


"சரி.. உன் தகுதியை சொல்லு, உனக்கு ஏத்த வேலையை நான் தேடி தர்றேன். இந்த பெரிய கூட்டை விட்டு வெளிய வந்தா, நீ சரியாகிடுவ"


விஜய் தலை குனிந்து இருந்தான். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. அதன் பிறகு மெதுவாகச் சொன்னான்.


"நான் படிச்சது பத்தாம் வகுப்பு மட்டும்தான்"


"அதுக்குப்பறம்?" வருண் கேட்டான். "ஆர்வமில்லையா? இல்ல புடிக்கலையா?"


"இல்லை, எனக்குப் படிக்கப் பிடிக்கும், பப்ளிக் எக்ஸாம்லயும் நல்லா மார்க் வாங்கினேன். என்ஜினீயரிங் காலேஜ்ல சேரணும்னு ஆசைப் பட்டேன். ஆனா அது எப்படி சாத்தியமாகும்னு எனக்கு தெரியல"


"அபபறம் என்ன நடந்துச்சு?"


சிறிது இடைவெளி விட்டு விஜய் தொடர்ந்தன்.

“நான் அனாதை இல்லத்துல பதினோராம் வகுப்பு படிக்கறப்ப அங்க இருக்குற அனாதை இல்ல நிர்வாகிகளோட கொடூரமான ஒரு முகம் எனக்கு தெரிஞ்சுது. ஆனா அந்த இல்லத்துக்கு நெறைய பணம் வந்துச்சு. என் ஆர் ஐ களோட அரசாங்க உதவி மையமும் உள்ளூர் வணிகர்களும் நெறைய பணம் குடுத்தாங்க. பெரும்பாலான பணம் அறங்காவலர்களாலதான் சேகரிக்கப்பட்டது. ஆனா அவங்க தேவைக்காக எங்க பணத்தை எடுத்து பயன்படுத்திட்டாங்க"


"........"


"நல்ல சாப்பாடு, உடை, புத்தகங்கள் கூட தரதில்ல. கண் முன்னாலேயே எஙக வாழ்க்கை அழிஞ்சிட்டிருந்துச்சு. இதுபத்தி நான் அவங்ககிட்டயே கேள்விகள் கேட்டேன். அவங்க என்னை அமைதியா இருனு எச்சரிக்கை பண்ணாங்க. ஆனா நான் அதையும் மீறி அவங்க போலித்தனத்த வெளி உலகுக்கு காட்டணும்னு முயற்சி பண்ணேன். அவங்க என்னை தண்டிக்க அவங்க ஆபீஸ்ல நான் பணத்தை திருடிட்டதா சொல்லி என்மேல போலீஸ்ல புகார் குடுத்துட்டாங்க. அதுக்கப்பறம் நான் அங்கருந்து தப்பிச்சு வந்துட்டேன்"


சிறிது இடைவெளிக்குப் பிறகு விஜய் மீண்டும் தொடர்ந்தான்.

"அதுக்கப்பறம்.. சாப்பாடு, தங்குமிடத்துக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதிகாலைல எழுந்து வீடுகளுக்கு செய்தித்தாள்கள் டெலிவரி செய்றது, ஹோட்டலில் சர்வர், பெட்ரோல் பங்க், கூரியர் பாய்னு பல வேலைகளைச் செஞ்சேன். அப்போத்தான் நான் உண்மையாவே இந்த உலகத்தை தெரிஞ்சுகிட்டேன். நிஜமாகவே மனுசங்க எல்லாம் பணத்துக்காகத்தான் ஓடினாங்க. பணத்துக்காக எதையும் செய்வாங்க. அன்பு, கருணை, விசுவாசம் எதுவும் இல்லை. கடைசியா அந்த லேத் தொழிற்சாலைக்கு வந்தேன்."


".........."


"நான் படிக்க விரும்பினேன். என் மேல் படிப்பை முடிச்சுட்டு சொந்தமா சிறுதொழில் தொடங்க நினைச்சேன். அதுக்கு எனக்கு பணம் தேவையா இருந்துச்சு. நான் கஷ்டப்பட்டு உழைச்சு பணத்தை சேத்தேன், அதே நேரத்தில என்னோட சக ஊழியர்கள் அவங்க சம்பாத்தியத்தை பொறுப்பில்லாத முறையில செலவழிச்சாங்க. ஆனா என் கையில் பணம் இருக்குனு தெறிஞ்சதும்...” என்று ஆழ்ந்த மூச்சை விட்டான்.


சில நொடிகள் அமைதி நிலவியது. பூங்கா மெல்ல மெல்லக் காலியாகிக் கொண்டிருந்தது. 


"ஸாரி" வருண் மௌனத்தைக் கலைத்து வருத்தத்துடன் கூறினான். சிந்தனையுடன் தன் தாடையை வருடினான்.


"சரி, இப்போ நீ முதல்ல ஹையர் செகண்ட்ரியை முடிக்க இந்த நேரத்தை பயன்படுத்திக்கோ. நீ நேரடியாக டுவல்த் படிக்கலாம். அதுக்கு நீ முதல்ல ஒரு டுட்டோரியல் செண்டர்ல சேரணும். அதை நான் பாத்துக்கறேன்", என்று உறுதியாகச் சொன்னான் வருண்.


விஜய் தலையை ஆட்டினான். 


"போலாமா?"


"ம்ம்"


"ரிலாக்ஸா இரு.. இது உன் வீடு.." என்றான் வருண்.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!