செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

என்னைக் கொஞ்சம் எடுத்துக் கொள் -1

வேகமாக ஓடி வந்த  நான் சட்டென கால்தட்டி இடறி கீழே விழப் போனேன்.  என் கால் இடறிய வேகத்தில் எனது  இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி விழுதலில் இருந்து பலமாக அடிபடாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் அகலமாக விரித்துக் கொண்டு சரியப் போன வேளையில்... என் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த நிருதி மாமா மேல் போய் மோதினேன் ..!!
கையில் மொபைலை வைத்து நோண்டிக் கொண்டே குனிந்தபடி வந்த நிருதி மாமா இறுதி கணத்தில் என்னை உணர்ந்து சுதாரித்துக் கொள்ளும் முன், பாய்ந்து வந்த காளை போல அவரை நான் ஒரே முட்டாக முட்டித் தள்ளி விட்டேன். !!

அவ்வளவுதான். அவரை இடித்துத் தள்ளி விட்டு நான் இடது பக்கத்தில் சரிந்து விழுந்தேன். நிருதியும் அவருக்கு இடது பக்கத்தில் வரிசையாகப் போடப்பட்டிருந்த சேர்கள் மீது போய் மோதி தடுமாறி கீழே விழுந்தார்.. !!

எனக்கு எங்கு அடிபட்டது என்றுகூட நான் கவனிக்கவில்லை. என் ஈரக்குழை எல்லாம் நடுங்க, நான் பதறி எழுந்து நின்றேன். எனக்கு பேசக்கூட வார்த்தை வரவில்லை.
நான் அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டு மிரண்டு நின்றேன்.. !!

 விழுந்து பின் கையூன்றி தடுமாறி எழுந்த நிருதி மாமா முதலில் மண்டையைத்தான் தேய்த்துக் கொண்டார். பின் சேர்களுக்கடியில் கிடந்த அவரது மொபைலை தேடி எடுத்தார். அதை துடைத்து அமுக்கிப் பார்த்து விட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.. !! அந்தக் கண்களில் தெரியும் எரிமலைத் தணலைத் தாங்க முடியாமல் பயத்தில் உடல் விதிர்க்க பின்னுக்கு நகர்ந்தேன்.. !!

'ஸாரி.. ஸாரி.. !' என்று மனதுக்குள் கதறிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு எழுத்து கூட என் தொண்டையை தாண்டி வெளியே வரவில்லை. என் கண்கள் நீர் கோர்த்துக் கொண்டது.

அடுத்தது என்ன நடக்கும் என்பதை நான் ஓரளவு யூகித்தே இருந்தேன். அதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தேன். ஆனால் பயம் என்னை எஙகும் நகர விடவில்லை.. !! இதற்கிடையில் என்னைத் துரத்திக் கொண்டு வந்த வாண்டு சுரேஷ் போன இடம் தெரியவில்லை.. !! ஆனால் வேறு சிலர் எங்களை சுற்றி கூடியிருந்தது எனக்கு கொஞ்சம்  மன பயத்தை போக்கியது.. !!

அவர் எதுவுமே பேசவில்லை. நேராக என் முன்னால் வந்து நின்றார். நான் அவர் கண்களைப் பார்த்து அஞ்சி நின்றேன். ஒரு நொடியில் அவர் வலது கை உயர்ந்து சாட்டை போல சுழன்றது.
''பளீர்.. !!'' என என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அவ்வளவுதான் எனக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.  கண்களுக்குள் மின்மினிகள் கூட்டம் கூட்டமாக பறக்கத் தொடங்கியது.. !! நிலை தடுமாறி கீழே விழப்போய் எதன் மேலோ முட்டிக் கொண்டு நின்றேன்.. !!

யாரோ அவரை தடுத்தார்கள். என்னமோ திட்டினார்கள். எனக்கு எதுவும் தெரியவில்லை.. !! என்னை யாரோ தொட்டு அணைத்து என் கன்னம் தடவி என் தோளில் கை போட்டு என்னை அழைத்துக் கொண்டு போனது மட்டும் தான் எனக்கு தெரிந்தது.. !!

என்னைப் பற்றி.. !! நான் நந்தினி பிரியா.. !! எம் எஸ் ஸி பர்ஸ்ட் இயர்.. !! இந்த நிருதி, என் பெரிய அத்தை மகன்.. !! எனக்கு முறைப்பையன் என்றாலும் இன்றுவரை நான் அவரிடம் சரியாக பேசியது கூட கிடையாது.. !! செரியான கோபக்காரன், முசுடு எனப் பெயர் வாங்கியவர்.. !! அவரிடம் நேரில் நின்று பேச அவரது அக்காளே பயப்படுவாள்.. !!

இன்று எங்கள் ஒன்று விட்ட உறவுப் பெண் ஒருத்தியின் நாளைய பூப்புனித நீராட்டு விழாவுக்காக இந்த வீட்டில் ஒன்று கூடியிருக்கிறோம். நாங்கள் இருப்பது எல்லாம் சொந்த பந்தங்களுடன் ஒரே ஊருக்குள்தான்.. !!

வசந்தி அக்கா ஓடி வந்து என்னைக் கேட்டாள்.
''என்னடி தம்பி உன்னை அடிச்சிட்டானா.. ??''

 இவள்தான் அவரது உடன் பிறந்த அக்கா.
இவளது மூத்த பையன்தான் என்னை துரத்திக் கொண்டு வந்த வாண்டு சுரேஷ். அவனிடமிருந்து விளையாட்டாக தப்பிக்க ஓடி வந்துதான் நிருதி மாமா மேல் முட்டிக் கொண்டேன். ஆனால் அதற்கு எந்த வகையிலும் அவர் காரணமே இல்லை. தப்பெல்லாம் என்னுடையதுதான்.. !!

மெதுவாக தலையை ஆட்டினேன்.
'' ம்ம்.. !!''
என் அழுகை ஓய்ந்து விட்டிருந்தது. ஆனால் அடிபட்ட கன்னம் மட்டும் இன்னும் தீயாக எரிந்து கொண்டிருந்தது.!
'' எங்க அடிச்சான்.. ??'' என்னை லேசாக அணைத்தபடி என் கன்னம் தொட்டு வருடினாள். ''பரதேசி எப்படி அறைஞ்சிருக்கான் பாரு.. ?? ஒரு சின்ன பொண்ணுணு கூட பாக்காம.. ?? அவன.. ?? ரொம்ப வலிக்குதா.. ??''
''இல்லேக்கா.. !!'' நான் சமாளித்துக் கொண்டு சொன்னேன்.
''அவன் சின்ன வயசுலருந்தே அப்படித்தான்டி ரொம்ப மொரட்டு தனமா வளந்துட்டான். நானே இப்பக்கூட அவன்கிட்ட பேசனும்னா ஒரு பத்தடி தள்ளி நின்னுதான் பேசுவேன்.. !! என்னைலாம் அவன் அடிச்சதே இல்ல. ஆனாலும் அவன பாத்தாலே எனக்கு பயம் வந்துரும்.. !! என்னடி பண்றது.. ?? அவன எப்படி சரி பண்றதுனே யாருக்கும் தெரியல.. !!''  என் கன்னம் வருடிக் கொண்டே சொன்னாள்.
''ம்ம்.. பரவால்லக்கா..  நான் ஒரு அடியோட தப்பிச்சேனே அதுவே பெரிய விசயம்.. !!'' சொல்லி விட்டு நான் லேசாக சிரித்தேன்.
''பார்ரீ.. கன்னத்துல விரல் பதியற மாதிரி அறை வாங்கிட்டு அதையும் சிரிச்சிட்டே சொல்றா.. ?? '' என்றாள் வசந்தி அக்கா.. !!

அன்றைய மாலை நேரத்து பேச்சு பெரும்பாலும் என்னைப் பற்றியதாகத்தான் இருந்தது. நிருதி மாமாவிடம் நான் வாஙகிய ஒரு அறைக்காக நிறைய பேர் என்னை அழைத்து அக்கறையாக பேசினார்கள்.. !! ஆறுதல் சொன்னார்கள்..!! என்  பெரிய அத்தை என்னைக் கொஞ்சி என் கன்னத்தில் முத்தமெல்லாம் கொடுத்து தன் மகன் அடித்ததற்காக மன்னிப்பு கேட்டு என்னை சமாதானம் செய்தாள்.. !!

ஆனால் எனக்கு என் நிருதி மாமா மேல் ஏனோ கோபமே வரவில்லை.
' தப்பு என் மேல தானே..?  பாவம் அவருக்கு எங்கே அடி பட்டதோ.. ? மண்டையை எல்லாம் தேய்த்துக் கொண்டிருந்தாரே..? அதை பற்றி யாருமே அவரிடம் விசாரிக்கவில்லையே.. ? என்னை அறைந்து அவர் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டாரே.. !' என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.. !!

இரவு ஒன்பது மணி இருக்கும். நான் அப்போதுதான் என் வீட்டுக்கு போய் விட்டு வந்து கொண்டிருந்தேன். சீர் வீட்டு பக்கத்தில் போனபோது எனக்கு பின்னால் இருந்து..
'' ஏய்ய்.. !!'' என்ற நிருதி மாமா குரல் கேட்டது.
சட்டென திரும்பி பார்த்தேன். என் பக்கத்தில் வந்திருந்தார். அவரை பார்த்த உடனே நான் உச்சா போய்விடுவேன் போலிருந்தது. என் அடி வயிற்றில் அப்படி ஒரு பயம்.. !!

''உங்க பெரிய அத்தைய பாத்தியா.. ??'' எனக் கேட்டார்.
''ம்ம்.. உ.. உள்ள இருந்தாங்க.. !!'' தடுமாறிக் கொண்டு சொன்னேன்.
'' வீட்டு சாவி வேணும். போய் வாங்கிட்டு வா.. !!'' என கட்டளை போல சொன்னார்.

நான் பதில் கூட சொல்லாமல் வீட்டுக்குள் ஓடினேன். நாளைய சமையலுக்கான வேலையில் ஈடுபட்டிருந்த  என் பெரிய அத்தையை தேடிப் பிடித்து,
''நிரு மாமா வீட்டு சாவி வாஙகிட்டு வரச்சொல்லுச்சு.. !!'' என்றேன்.
''எங்கருக்கான்.. ??''
''வாசல்ல நிக்குது.. !!''
''நீயே குடுத்துர்ரியா.? அத்தை கை வேலையா இருக்கேன்.. ??''
''ம்ம்... குடுங்க.. !!''
அத்தை சாவியை எடுத்து கொடுத்தாள்.
''பாத்து தங்கம். அவன் கைல குடுத்ததும் நீ ஒடியாந்துரு. மறுபடி அடிச்சாலும் அடிப்பான்..!!''
''இல்லத்த. தப்பு என் பேர்லதான். நான்தான் மாமாவ தள்ளி விட்டுட்டேன்.. !!'' எனச் சொல்லி விட்டு வெளியே போய் தெருவை பார்த்தபடி நின்றிருந்த நிருதி மாமாவிடம் சாவியை நீட்டினேன்.
வாங்கியவர் என் முகம் பார்த்து,
''சாப்பிட்டியா ??'' எனக் கேட்டார்.
''ம்ம்.. !!'' தலையை ஆட்டினேன்.
''எனக்கு பசிக்குது வந்து சாப்பாடு போடு வா.. !!''
நான் திகைத்தேன்
''நானா.. ??''
''ஏன்.. அதெல்லாம் நீ செய்ய மாட்டியா.. ??'' குரல் திடமாக இருந்தது.
''செ.. செய்வேன்.. எங்கம்மாகிட்ட போய் சொல்லிட்டு..... ''
''நானே சொல்றேன் வா.. !!'' என்றவர் சட்டெனத் திரும்பி சீர் வீட்டுக்குள் போனார். நான் அவர் பின்னால் லேசான தயக்கத்துடன் போனேன். என் அம்மாவிடம் போய் என்னை உணவு பறிமாற அழைத்து போவதாக சொன்னார். என்னை எலலோரும் வாயை திறந்த படி பார்த்தனர்.. !!

நானே முந்திக் கொண்டு சொன்னேன்.
''வாங்க மாமா.. நான் போட்டு தரேன்.. !! அத்தை என்னென்ன செஞ்சி வெச்சிருக்கிங்க.. ??'' என்று நான் அத்தையை கேட்டேன்.
அத்தை நிருதி மாமாவிடம் கேட்டாள்.
''ஏன்டா.. ஒரு சின்ன பொண்ணுன்னுகூட பாக்காம இப்படியா அறைவ.. ? அவ கன்னத்த கொஞ்சம் பாரு எப்படி செவந்து போய் இருக்குனு.. மனுஷானாடா நீ.. ??''
''அத்தே பேசாம இருங்க.. !!'' நான் பதறினேன் ''தப்பு என் மேலதான் மாமா மேல ஒரு தப்பும் இல்ல.. ? மாமாக்கு மண்டைல எல்லாம் கூட அடி பட்றுச்சு தெரியுமா.. ?? ஆனா அதை பத்தி யாருமே கேக்க மாட்டேங்கறிங்க.. ?? மாமாவ திட்டாதிங்க.. !! வாங்க மாமா.. !! நான் சாப்பாடு  போட்டு தரேன்.. !!'' என நான் சிரித்தபடி அத்தையை அடக்கி மாமாவை அழைக்க, அவரே என்னைக் கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்தார். பின் யாரையும் திரும்பி பார்க்காமல்..
''வா.. !!'' என்று விட்டு வெளியே போனார்.

என்னென்ன செய்து வைத்திருக்கிறேன், அதை எப்படி எப்படி பறிமாற வேண்டும் என்றெல்லாம் என்னிடம் சொன்ன என் அத்தை யாரையாவது துணைக்கு அழைத்துக் கொண்டு போகச் சொன்னாள். ஆனால் அந்த நேரத்தில் எனக்குத் துணையாக வரக் கூடியவர் யாரும் இருக்கவில்லை.  நானும் யாரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளவில்லை.. !!
''எங்க  மாமாகிட்ட எனக்கு பயம் எல்லாம் எதுவும் இல்ல.. !'' எனச் சொல்லி விட்டு போனேன்.. !!

அடுத்த தெருவில்தான் என் அத்தை வீடு. நான் வீட்டில் நுழைந்த போது டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார் மாமா. !!  என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. !!

''சாப்பாடு போட்டுட்டு வரட்டுமா மாமா.. ??'' என்று  மெதுவான தயக்கத்துடன் கேட்டேன்.
'' ம்ம்.. !!'' என்றார்.

நான் சமையலறைக்குள் போய் ஒரு தட்டில் உணவை போட்டு குழம்பு பொறியல் தண்ணீர் எல்லாம் எடுத்துக் கொண்டு போய் டேபிள் மீது வைத்தேன்.. !!
எல்லாம் எடுத்து வைத்து..
''சாப்பிடுங்க மாமா.. !!'' என்றேன்.
என்னை திரும்பி பார்த்தார்.
'' நீ போ.. !!''
'' இல்ல.. மாமா.. இருக்கேன்.. !! நீங்க.. சாப்பிடுங்க.. !!'' தடுமாற்றத்துடன் சொன்னேன்.

  எதுவும் பேசாமல் எழுந்து அறைக்குள் போனார். திரும்பி வந்த போது அவர் கையில் ஒரு பிரான்டி பாட்டிலும், டம்ளரும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டும் இருந்தது.. !!

''போகலியா நீ.. ??'' என்று கேட்டார்.
''இ.. இல்ல.. மாமா.. நீங்க சாப்பிட்டப்பறம் எல்லாம்.. எடுத்து வெச்சிட்டு... ''
''அப்படியா.. ??'' சிரித்தார்.
''ம்ம்..!!'' தயக்கத்துடன் அவரையே பார்த்தேன்.
''நான் குடிக்கறேன்டி.. !!'' என்றார்.
''பரவால்ல மாமா.. குடிச்சுக்கோங்க.. !!''

சேரில் உட்கார்ந்து டீ பாயை இழுத்துப் போட்டு அதன் மேல் கிளாஸை வைத்து விட்டு பாட்டில் மூடியை திருகினார்.
''யாருகிட்டயாவது சொல்லுவ.. ??'' என்று என்னைப் பார்த்தார்.
''ம்கூம்.. !!'' உடனே மறுத்தேன்.
''கொன்னுருவேன்.. !! அந்த ப்ரிட்ஜ்ல பெப்சி பாட்டில் இருக்கும் பாரு.. !! எடுத்துட்டு வா..!!'' என்றார்.  

அதை எடுத்து கொடுத்தவுடன் ஓடி விடலாமா என்கிற ஒரு பய உணர்வு தோன்றி என்னைத் தடுமாற வைத்தது.. !! என்ன செய்வதென புரியாத பய உணர்விலேயே ப்ரிட்ஜில் இருந்த பெப்சியை எடுத்து போய் அவரிடம் கொடுத்தேன்.. !!

வாங்கிக் கொண்டு,
''இருக்கியா.. போறியா ??'' என்று என்னை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார்.
''இ.. இருக்கேன்.. !!''
''என்னைக் கண்டா பயமா இருக்கா.. ??''
''இ.. இல்.. இல்ல.. மாமா.. ''
''அப்பறம் ஏன் என்னை கண்டா மெரண்டு மெரண்டு ஓடுற.. ?? உக்காரு.. !!''

நான் தயங்கிவிட்டு சோபாவில் உட்கார்ந்தேன். அவர் பக்கத்தில் இருந்த டிவி ரிமோட்டை தூக்கி என்னிடம் வீசினார்.
''ம்ம்.. என்ன புடிக்குதோ போட்டு பாரு.. !!'' 

 டம்ளரில் ஊற்றிய பிராண்டியில் பெப்சியைக் கலந்து எடுத்து அப்படியே வயிற்றுக்குள் அனுப்ப, நான் விரித்த கண்களை மூடாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. !!


விரும்பிப் படித்தவை.. !!