கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்திருந்தன. வாழ்க்கை சீராகச் சென்று கொண்டிருந்தது.
சூரியனோ எந்த குறிப்பும் கொடுக்காமல் வழக்கம் போல் அன்பாக அன்றைய தினத்தை தொடங்கினான்.
ஆந்திரா எல்லைக்கு அருகில், நெல்லூரில் உள்ள தனது கிளை அலுவலகத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், வருண் சூரிய உதயத்திற்கு முன்பே வீட்டை விட்டுக் கிளம்பினான்.
நேரம் காலை பத்து மணி. விஜய் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை.
ஆனந்தி காலை உணவுக்கு பின் சமையலறையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்.
முதலில் அவள் போன் அடிப்பதை கவனிக்கவில்லை. மீதி உணவுகளை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தபோது, இரண்டாவது முறையாக அவளது போன் ஒலித்தது.
அதன்பின் அதை எடுத்து காதில் வைத்தாள்.
"ஹலோ..?"
"மிஸஸ் ஆனந்தி வருண் இருக்காங்களா?" என்று ஆண் குரல் ஒன்று கேட்டது.
"யெஸ்.. நான்தான் ஆனந்தி.. சொல்லுங்க.."
"ஸாரி டூ ஸே…"
அதற்குப் பின் எதிர் முனையில் சொல்லப்பட்ட அந்தச் செய்தியைக் கேட்டதும், அவள் இதயத்தில் திடீரென ஓர் அதிர்ச்சி அலை எழுந்து அவளைத் தாக்கியது.
ஒரு நொடியில் அவள் இதயம் ஸ்தம்பித்து நிற்க.. புத்தி செயலிழந்து போனது. அவளால் பேசவோ மூச்சு விடவோகூட முடியவில்லை. உறைந்து போன நிலையில் அப்படியே நின்று விட்டாள்.
கையில் இருந்த மொபைல், அவள் கையிலிருந்து பிடிப்பில்லாமல் நழுவி தரையில் விழுந்து சிதறி அணைந்து போனது.
ஹாலில் மொபைல் விழுந்த சத்தம் கேட்டு விஜய் அறையை விட்டு வெளியில் வந்தான். ஆனந்தி மூச்சுத் திணறி நிற்பதைப் பார்த்தான். அவள் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.
ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவன் ஓடிவந்து கீழே சிதறிக் கிடந்த அவளின் மொபைலை பொறுக்கி எடுத்து பேட்டரி போட்டு ஆன் செய்தான்.
அது ஆன் ஆகியதும், மீண்டும் போன் அடிக்க ஆரம்பித்தது.
விஜய் அழைப்பை ஏற்று செய்தியைக் கேட்டான்.
"ஹலோ.."
அருணின் எச். ஆர் போனில் பேசினார்.
"மிஸஸ் ஆனந்தி..?"
"இ.. இல்லை.. நான்.. விஜய்.. வருண் சாரோட தம்பி.."
அதன்பின் அவர் விவரத்தைச் சொன்னார்.
"விஜய்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. மிஸ்டர் வருண் மீட்டிங்குக்கு போன கார் நெல்லூர்கிட்ட ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு. இப்போ அவர் கொஞ்சம் கிரிட்டிக்கலான சுட்சுவேஷன்ல ஹாஸ்பிடல்ல இருக்கார். இப்ப எங்க ஆள் ரெண்டு பேரை உங்க வீட்டுக்கு அனுப்பறோம். நீங்க மிஸஸ் ஆனந்தியை கூட்டிட்டு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வர்றது நல்லது"
அதைக் கேட்டு அதிர்ந்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள ஆழ்ந்த மூச்சை எடுக்க ஆரம்பித்தான் விஜய்.
அதன்பின் வருணின் அலுவலக ஊழியர்கள் வந்து அவர்களை அலுவலக வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
"இல்லை.. ஒன்னுமில்லை.. வருணுக்கு ஒன்னும் ஆகாது. அதிகமாக யோசிக்காதே ஆனந்தி, நீ அங்கு சென்றவுடன் வருண் சரியாகி விடுவான். தயவுசெய்து அமைதியாக இரு.. கட்டுப்படுத்திக் கொள்", என்று பயணம் முழுவதும் ஆனந்தி தனக்குள் புலம்பித் தவித்துக் கொண்டிருந்தாள்.
அவள் தனக்குத் தெரிந்த அனைத்து தெய்வங்களின் பெயர்களையும் நினைத்து கருணை காட்டும்படி கெஞ்சினாள்.
அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது, அவள் அவற்றைத் துடைக்கவில்லை. அது கூட தெரியாமல் அழுது கொண்டிருந்தாள்.
மதியம் அவர்கள் மருத்துவமனையை அடைந்தபோது, வருணின் எச். ஆரும், மற்ற சில அலுவலக ஊழியர்களும் அங்கே இருந்தனர். அனைவரின் முகத்திலும் கவலை படர்ந்திருந்தது. இரண்டு போலீசார் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர்.
ஹெச் ஆர், ஆனந்தியை மருத்துவரின் அறைக்கு அழைத்துச் சென்றார்.
அவள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வருணின் உடலை அடையாளம் காண அவளை இங்கு அழைத்து வந்ததாக மருத்துவர் உண்மையான செய்தியை வெளிப்படுத்தியபோது, ஆனந்தி தனது தலையில் ஆயிரம் இடி விழுந்ததைப் போல உணர்ந்தாள். தன் காலடியில் பூமி அசைவதை உணர்ந்தாள். அவள் மரம் போல் கீழே மயங்கி விழுந்தாள்.
கேப் டிரைவரின் கவனக் குறைவே விபத்துக்கு காரணம் என போலீசார் முடிவு செய்தனர்.
இரண்டு நாட்கள் ஓய்வின்றி தொடர்ந்து உழைத்ததால் வாகனத்தை ஓட்டிக்கொண்டே உறங்கியிருக்கிறார். இதனால் சாலையோரம் வந்த லாரி மீது கார் மோதியதில் காரின் முன்பகுதி லாரிக்கு அடியில் பொம்மை போல முற்றிலும் நசுங்கி விட்டது.
டிரைவரும் முன்னால் அமர்ந்திருந்த வருணும் அங்கேயே இறந்து விட்டனர்.. !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக