ஞாயிறு, 5 நவம்பர், 2023

என்னை நேசித்தவள்-4

 இரவு பத்து மணிக்கு நான் அந்த பாரை விட்டு வெளியே வந்த போது மழை தூரிக் கொண்டிருந்தது. 


அது அரை மணி நேரமாக இப்படியேதான் தூரிக் கொண்டிருக்கிறது.!! 


மழையை பொருட் படுத்தாமல் நான் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.. !!


என் வீடு போனபோது நன்றாகவே நனைந்திருந்தேன். சத்யா வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. 


நான் பைக்கை நிறுத்தி இறங்க.. சத்யா வந்து எட்டிப் பார்த்தாள்.. !!


''மழை பெய்து '' என்றாள்.


'' ஆமா.. சத்யா..!!'' சிரித்தேன்.


அவளும் சிரித்து விட்டாள்.

''குட்.. !! எப்படி நனையாம வந்தீங்க.. ??''


'' துளிக்கு துளி.. தப்பிச்சு வந்தேன்..!! நீ தூங்கல..??''


'' தூக்கம் வரல..! தலையை தொடைங்க மொதல்ல.. !!''


நான் சாவி எடுத்து கதவைத் திறக்க முயன்ற போது கொஞ்சம் தள்ளாடினேன்.


 என் நிதானம் தவறுவதை என்னால் உணர முடிந்தது. ஆனால் சத்யா முன்பாக அதைக் காட்டிக் கொள்ளக் கூடாது என என்னை நானே நிலைப் படுத்திக் கொண்டிருந்தேன். 


ஆனால் நான் முதலில் தள்ளாடியபோதே அவள் கவனித்து விட்டாள்.!


'' நிரு.. குடிச்சிருக்கீங்களா..?'' என சன்னமாகக் கேட்டாள்.


சட்டென..'' இல்ல..'' என்றேன்.


''அப்றம் நிக்க முடியாம தள்ளாடறீங்க..? பொய் சொல்லாதிங்க.. ? ட்ரிங்க்ஸ் அடிச்சிருக்கீங்கதானே..?''


'' யாரு.. நானா..? மழைல நனைஞ்சதால.. உடம்புலாம் கொஞ்சம் நடுங்குது... தட்ஸ் ஆல்..!!''


நான் பூட்டைத் திறக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தேன்.


'' தட்ஸ் ஆல்..!!'' அவள் வீட்டில் இருந்து இறங்கி ஓடி வந்தாள். ''ஆமா நீங்க குடிக்கல.!! குடுங்க இப்படி..!!''


என்னிடமிருந்து சாவியை வெடுக்கென பிடுங்கி.. பூட்டைத் திறந்து விட்டாள்.


'' தைரியமா வரே..? வீட்ல யாரும் இல்லையா ?''


'' ஹப்பா... என்ன ஒரு கப்பு.. ?? ம்ம்ம்ம்..!!'' மூக்கை பொத்திக் கொண்டாள், ''காசில்லேனு மட்டமான சரக்க வாங்கி அடிச்சிங்களா.. ??''


'' விக்கறதே மட்டமான சரக்குதான்..! காசெல்லாம் இருக்கு.. எத்தனை வேணும் உனக்கு..?'' என் சட்டை பாக்கெட்டில் தேவை இல்லாமல் கை விட்டேன்.


'' குடிக்கலேனு கதை வேற.. இதுல..??''


'' சும்மா சொன்னேன்.. ஸாரி...!!'' என்று சிரித்தேன். ''ஆமா.. உன் வீட்ல ஆள் இல்லையா ?''


'' இல்ல.. ''


'' ஏன்.. எங்க போனாங்க..?''


'' எங்க சொந்தத்துல ஒரு சாவு..! சாயந்திரமே போய்ட்டாங்க ரெண்டு பேரும்.. !!''


'' அப்ப நீ தனியாவா இருக்க..?''


'' ஆமா.. ''


'' ஏன்.. நீ போகல..?''


'' அது என்ன கல்யாண வீடா.. குடும்பத்தோட போறதுக்கு..? எழவு வீடு..!!''


'' குட்..'' என்றேன். ''பட்.. நான்தான் பேட்.. இன்னிக்குன்னு பாத்து குடிச்சிட்டு வேற வந்துருக்கேன்..!!''


'' ஏன்.. அதனால என்ன...?''


'' நத்திங்..''


'' சரி.. சரி உள்ள போய் துணிய மாத்துங்க மொதல்ல..! பாருங்க உங்க ட்ரெஸ்ஸெல்லாம் எப்படி நனைஞ்சிருக்குனு..??'' என்று மிகவும் அக்கறையுடன் சொன்னாள் சத்யா. !!


என் வீடு உள்ளே இருளாக இருந்தது. 


சத்யா உள்ளே பார்த்து விட்டுச் சொன்னாள்.

'' உள்ள இருட்டா இருக்கு.! நில்லுங்க நானே போய் லைட் போடறேன். இருட்ல போய் எது மேலயாவது மோதி விழுந்துட போறிங்க..''


'' ஹே.. சத்யா எனக்கு அவ்ளோ மப்பெல்லாம் இல்ல..''


'' ஆமா.. தெரியும். பேசாம நில்லுங்க..!!''


நின்றேன். 


 சில நொடிகளில் விளக்குகள் பளிச்சென எரிந்தது.


சத்யா இப்போது நைட்டியில் இருந்தாள். அதிலும் அவள் அழகாகவே இருந்தாள். 


அவளை நான் பார்க்கும் பார்வை தவறாகப் போய் விடக் கூடாது என்று மிகுந்த கவனத்துடன் இருந்தேன்.!


'' தேங்க்ஸ் சத்யா..!!''


'' சாப்பிட்டிங்களா..?''


'' சாப்பிட்டேனா..? நானா..? ம்ம்ம்ம்... இரு.. யோசிக்கறேன்..!! ம்ம்ம்ம்.. தெரியலை சத்யா..! என்னை பாத்தா சாப்பிட்ட மாதிரி ஏதாவது தெரியுதா..?'' என்று  நான் கேட்க, அவள் வாய் விட்டுச் சிரித்தாள்.


'' இல்ல..சாப்பிட்ட மாதிரி தெரியல.! குடிக்க போறதுக்கு முன்ன சாப்பிட்டிங்களா.. ??''


'' ஹே.. சாப்பிட்டு யாராவது போய் சரக்கடிப்பாங்களா..? நெவர்..!!''


'' அப்போ நீங்க சாப்பிடலை.! ஓகே... ட்ரஸ் சேஞ்ச் பண்ணுங்க நான் போய் சாப்பிட கொண்டு வரேன்..!!'' என்று விட்டு அவள் வெளியே போக.. அவளுக்குப் பின்னால் நானும் போனேன்.


சத்யா திரும்பி என்னைப் பார்த்தாள்.

''எங்க வரீங்க? ''


'' நீ போ..''


'' பாத்ரூம்க்கா.. ? கொடை புடிச்சிட்டு போலாமில்ல.?''


ஆனால் நான் பாத்ரூம் போகவில்லை. நடு வாசலில் போய் நின்றேன். 


அண்ணாந்து வானம் பார்த்தேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் மழைத் துளிகள் என் முகத்தில் சிலலென்று அறைந்தன. 


வேகமாக வந்து முகத்தில் அறையும் மழைத் துளிகளின் சிலிர்ப்பை ரசித்தவாறு கண்களை மூடிக் கொண்டு கைகளை விரித்தேன்.


'' நிரு.. என்ன பண்றிங்க..??'' சத்யா கத்திக் கேட்டாள்.


வானம் பார்த்து நீட்டிய கைகளை சட்டென அவளை நோக்கி நீட்டினேன்.

''மண்ணில் சொர்க்கம் மீளுவாய்..'' பாடினேன்.


சத்யா வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

'' மழைல நனையாதிங்க நிரு..! வாங்க பேசாம..!!''


அவள் சொன்னதை நான் கேட்கவில்லை.


'' மழைல நனைய ரொம்ப புடிச்சிருக்கு.."


'' நிரு.. பைத்தியமா உங்களுக்கு..?''


'' ஆமா.. அதும் பிடிச்சிருக்கு..''


'' இப்ப நீங்க வரப் போறிங்களா இல்லையா ??''


'' நான்.. நல்லா... மனாசார நனையனும் சத்யா.. !!''


'' அட ஆண்டவா..! குடிச்சிட்டு வந்து ஏன் நிரு இப்படி அலும்பு பண்றிங்க..?'' நிஜமாகவே கவலைப் பட்டாள்.


'' இது அலும்பு இல்ல சத்யா. அசிங்கம்.! அதான் கழுவறேன்..!!''


'' அசிங்கமா..? என்ன ஒளர்றிங்க. ?''


'' என் பீலிங்க்ஸ் எல்லாம் உனக்கு புரியாது சத்யா..! சொன்னா நம்ப மாட்ட.. இப்ப மட்டும் ஒரு இடி வந்து அப்படியே என் நடு மண்டைல நச்சுனு எறங்குச்சுனு வையேன்.. அப்படியே சொர்க்கத்துக்கு போயிருவேன்.. அப்படி ஒரு... ஒரு... இதுல இருக்கேன்.. !!''


'' ஹையோ நிரு..? என்ன ஒளர்றீங்க.? எல்லாம் செரியா போகும்.. ! நனைஞ்சது போதும் வாங்க வீட்டுக்குள்ள.. ''


'' அது உனக்குலாம் புரியாது சத்யா..! நீ போய் தூங்கு போ...!!''


'' உங்க பீலிங்க்ஸ எல்லாம் என் கிட்ட சொல்லுங்க.. கேக்கறேன் நனையாம வாங்க..!!''


''போ.. போ.. ! நீ போ.! கல்யாணமாகப் போற பொண்ணு.. !!'' சொல்லி விட்டு நான் முகம் அண்ணாந்து கண்களை மூடினேன்.


சில நொடிகளில் என் கை தொடப் படுவதை உணர்ந்து நான் கண் திறந்து பார்த்த போது.. சத்யாவும் என் பக்கத்தில் நின்று என்னுடன் சேர்ந்து மழையில் நனைந்து கொண்டிருந்தாள்.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!