செவ்வாய், 17 அக்டோபர், 2023

உன்னைச் சுடுமோ என் நினைவு -2

 நிருதி உடைகளை களைந்து லுங்கிக்கு மாறினான். கட்டிலில் சரிந்து படுத்தபோது அவன் மனைவி வந்தாள்.


"படுத்துட்டிங்களா?"


"ஏன்?"


"சாப்பிடலியா?"


"சாப்பிடணும்"


"சாப்பிட்டு படுத்துக்கங்க"


"ம்ம்"


"டயர்டா இருக்கீங்களா?"


"ஆமா.."


"அப்றம் ஆஸ்பத்திரி போறேன்றீங்க?"


"போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்தரலாம்"


"நான் நேத்தே போய் பாத்துட்டு வந்துட்டேன். நான் ஒருத்தி போய் பாத்தா பத்தாதா?"


"பரவால விடு.. நான் போயிட்டு வரதுனால ஒண்ணும் ஆகிராது"


"சும்மா எதுக்கு வெட்டி அலைச்சல்? அதுக்கு படுத்து நல்லா தூங்கலாமில்ல?"


"தூங்கத்தான் போறேன்.. நீ கிளம்பு"


"வீட்டுக்கு ஒருத்தர் பாக்க போனா போதும். அவங்க ஒண்ணும் நமக்கு சொந்தமில்ல. இந்த மாதிரி நாம இருந்தா அவங்க எல்லாருமா வந்து நம்மை பாக்க போறாங்க?"


"இது நம்ம விருப்பம். நான் வரேனு சொல்லிட்டேன். நீ போ.."


"ஆமா.. நான் சொல்லி எதை கேட்றுக்கீங்க. நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்றம் உங்க இஷ்டம்"


"ரைட்.. விடு"


"போறீங்களா அப்போ?"


"அதான்.  என்னோட இஷ்டம்னு சொல்லிட்டியே..?"


அவனை முறைத்தாள். 

"என்னை ஒரு மனுஷியாகூட மதிக்கறதில்ல"


"அது வேறயா?" சிரித்தான். 


"இளிக்காதிங்க.. கடுப்பா வருது" முகத்தை திருப்பிக் கொண்டு போனாள். 


பிள்ளைகள் குளித்து வந்து சாப்பிட்டு பள்ளிக்கு கிளம்பிவிட்டன. 


"அப்ப ஆஸ்பத்ரி போறீங்களா?" வேலைக்குக் கிளம்பும்போது மீண்டும் கேட்டாள் மனைவி.


"ஆமா.."


"என்னமோ செய்ங்க.. நான் சொல்லி எதை கேட்றுக்கீங்க..?"


"அதானே.. பக்கத்து வீட்டுக்காரி எதுத்த வீட்டுக்காரி சொல்றதை கேட்டுதானே நான் வாழறேன்.. நீ சொல்லி ஏதாவது கேட்றுக்கேனா?"


கடுமையான முறைப்பு. 

"அது ஒண்ணுதான் குறைச்சல் இப்போ? நெனப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம். மூஞ்சியும் மொகறையும் பாரு.. இதையெல்லாம் எவளும் சீந்த மாட்டா"


"ரொம்ப சந்தோசம்.. வேலைக்கு போறப்ப கடுப்புல போகாத.. ரிலாக்ஸா போ.."


"அது எங்களுக்கு தெரியும். போய்ட்டு வந்து ஒழுக்கமா வீட்ல படுத்து ரெஸ்ட் எடுங்க.. அவன் கூப்ட்டான் இவன் கூப்ட்டான்னு போய் சரக்கடிச்சுட்டு நைட்டு பத்து மணிக்கு மேல வர வேண்டாம்"


"அப்பறம்?"


"நான் வரப்ப வீட்ல இருக்கணும். இல்லேனா தொலைச்சுருவேன்" 


"எதை தொலைப்ப?"


"இந்த எகத்தாள பேச்செல்லாம் வேண்டாம். நான் அடிக்கடி போன் பண்ணிட்டே இருப்பேன். எடுத்து பேசுங்க. சைலண்ட்ல போட்டா மசக் கடுப்பாகிருவேன்"


"தூங்கறப்ப சைலண்ட்லதான் இருக்கும். எடுக்கலேனா விட்று.."


"அப்படி எல்லாம் விட முடியாது. எடுக்கறவரை பண்ணிட்டே இருப்பேன்" என்றுவிட்டுப் போனாள்.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!