சனி, 27 மார்ச், 2021

பிழையான வரம் -2

 அந்த கணத்திலிருந்தே குந்தியின் மனதை ஏக்கம் வந்து தொடத் தொடங்கியது. அந்த ஏக்கம் ஒவ்வொரு கணமும் அதிகரித்து அவளின் நெஞ்சில் இரும்புக் குண்டாய் கனமேற்றியது. அதன்பின் வந்த ஒவ்வொரு நாழிகையும் அவளை வருத்தமுறச் செய்தன. வருத்தம் அதிகரிக்க அதிகரிக்க அவளின் ஏக்கம் அவளின் மனதை மிகவும் வாட்டத் தொடங்கியது.. !!

மஞ்சத்திலிருந்து எழுந்து சென்று மேற்குச் சாளரத்தருகே நின்றாள். மெல்லிய காற்று வீசியதை உணரும் முன் அவள் கண்கள் மேற்கு நோக்கி ஏங்கின. அவள் நெஞ்சகம் வெடிப்பதை போல பெருமூச்செறிந்தது. தீச்சுடராய் மூச்சுக் காற்று அவள் மூக்கின் மெல்லிய மடலைச் சுட்டது. நொடிக்கு நொடி அவள் உடல் தீத்தனலாய் மாறியதை அவள் உணரத் தவறினாள்.

 அவள் எண்ணமெல்லாம் கதிரவனை கண்டடைந்து அள்ளி அணைப்பதிலேயே இருந்தது. ஆனால் கதிரவன் தன்னருகில் இல்லை என்கிற ஏக்கமும் அவளில் நிலைத்தே இருந்தது. அவள் நெஞ்சு நெடு மூச்சுக்களால் விம்மிக் கொண்டிருக்க அவள் உடலோ தனலாய் மாறிக் கொண்டிருந்தது. 

அவள் கதிரவனையே தன் மகவாக எண்ணிப் பித்தேறிய நிலையில் எதையும் எண்ணாதவளாக தன் குடிலை விட்டு வெளியேறினாள். மலர்வனத்தை அடைந்த அவள் கால்கள் அங்கும் நிலைகொள்ளவில்லை. ஏக்கமும் தவிப்பும் அவள் நெஞ்சில் உறைந்திருக்க அங்கிருந்தும் வெளியேறினாள். சேடிகளோ காவலர்களோ எவரும் அவள் அந்த கௌந்தவனத்தை விட்டு வெளியேறியதை கவனிக்கவே இல்லை.. !!

அவளைச் சுற்றிலும் படர்ந்திருக்கும் அந்தி இருளை அவள் உணரவே இல்லை. ஒளி வடிவப் பாதை ஒன்று அவளுக்கெனவே தோன்றியபோல அவள் முன் நீண்டு அவளை வரவேற்றது. அவள் நேராக பர்ணஸா நதிக்கரைக்கே சென்றாள். 

இரவின் குளிர் காற்று படர்ந்த நதி எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவள் வருகைக்காகவே காத்திருந்ததைப் போல மெல்லிய அலையோசை எழுப்பியபடியிருந்தது. வானில் நிறைந்திருக்கும் விண்மீன்களின் ஒளியில் நதி நீரலைகள் மின்னிக் கொண்டிருந்தது. கரையில் அங்கங்கே சில மின்மினிப் பூச்சிகள் மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்தன.. !!

மாலையில் நின்று கதிரவனின் அழகில் மயங்கிய அதே இடத்தில் சென்று நின்று மேற்கில் மறைந்த கதிரவனைத் தேடினாள். கதிரவன் ஒளிந்து விளையாடிய முகில் திரள்கூட இப்போது கலைந்து போயிருந்தது. அவள் தியானம் செய்வது போல மேற்கு நோக்கியே ஏங்கி நின்றாள். அவள் கண்கள் அவளின் சூரியக் குழந்தையைக் காண ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தன.. !!

பர்ணஸா நதிக்கரையில் நெடுநேரம் நின்று கால்கள் தளர்வதை உணர்ந்த பின்னரே அங்கு தான் மட்டும் தனித்து நின்றிருப்பதை அறிந்தாள் குந்தி. ஆயினும் அந்த இடத்தை விட்டு நீங்க அவள் மனம் ஒப்பவில்லை. தன் மனதில் தேங்கிவிட்ட இனிய மைந்தனை எப்படியாவது அடைய வேண்டும் என்கிற தவிப்பில் அவள் நிலைத்திருந்த போதுதான் அவள் நெஞ்சின் தவிப்பை நிறைவு செய்வதுபோல அந்த எண்ணம் உதித்தது.. !!

துர்வாச முனிவர் அவளுக்கு அளித்த வரம் அவளிடம் இருக்கிறது. அவள் அந்த மந்திரத்தை உச்சரித்தால் அவள் வேண்டும் சக்தியுடன் ஒரு குழந்தையைப் பெறலாம் என்பது அந்த வரம். அப்படியெனில் அவள் ஏன் சூரியனையே தன் குழந்தையாய் பெறக் கூடாது.? 

சூரியனே தன் முதல் குழந்தையாய் வர வேண்டும் என்பதையே அவள் உள்ளம் விரும்பியது. இன்னும் பெறாத அந்த சூரியக் குழைந்தையைக் கொஞ்சிக் குலாவி முத்தமிட்டு முலையூட்டிய உணர்வு அவளை ஒரு தாயாகவே மாற்றியிருந்தது. அந்த தாய்மையை அடையும் பாக்கியம் வரமாக தன் கையிலேயே இருக்கும்போது ஏன் நெஞ்சம் தவித்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டும்.. ??


****


தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப் பகுதியின் யாதவர்குலத் தலைவர் சூரசேனருக்கும், லவண குலத்தைச் சேர்ந்த மரீஷைக்கும் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தவள்தான் குந்தி. 

பத்து தமையர்களுக்கும், மூன்று தமக்கைகளுக்கும் இளையவளாய், மூத்தவனுடன் இணைந்தே தாயின் கருவில் வளர்ந்து, கோகுல கிருஷ்ணனின் தந்தையான வசுதேவனுக்குப் பின்னால் சிறிது நேரம் தாமதித்து பொருமையாகப் பிறந்த கடைசிக் குழந்தை அவள். 

இரட்டையர்களில் மூத்தவனான வசுதேவனுடன் ஒன்றாக இணைந்தே பிருதையாய் வளர்ந்து, மார்த்திகாவதியை ஆண்ட குந்திபோஜருக்கு தத்துப் பிள்ளையாய் வந்து குந்தி என்றானவள். கருமை நிற எருமைத்தோல் கொண்ட வேட்டுவக்குடி தாய்க்குப் பிறந்த வெள்ளைத் தோல் பேரழகி.. !!

மார்த்திகாவதியின் அரசர் குந்திபோஜனுக்கு உரிய கௌந்தவனம் என்ற பெயர்கொண்ட மலையடிவாரக் குறுங்காடு பர்ணஸா நதியின் கரையில் இருந்தது. சுற்றிலும் வெட்டப்பட்ட பெரிய அகழியால் உள்ளே வனமிருகங்கள் வரமுடியாதபடி செய்யப்பட்டு தவநிலையாக மாற்றப்பட்டிருந்தது. அந்த தவக் குடிலில் வந்து தங்கிய துர்வாச முனிவருக்கு பணிவிடை செய்து, அவரின் அன்புக்கு பாத்திரமானாள் குந்தி. அவளின் பணிவிடைகளில் மகிழ்ந்து அவள் மேல் கொண்ட அன்பால் தன் தவ வலிமையால் அவளின் வருங்காலம் உணர்ந்து, தந்தையெனக் கனிந்த அவரிடமிருந்து அவள் பெற்ற வரம் அவள் விரும்பும் குழந்தையை அளிக்கக் கூடியது.. !!

அவள் முடிவு செய்தாள். சூரியனையே தன் குழந்தையாகப் பெற வேண்டுமென. அங்கேயே கண்களை மூடி அமர்ந்தாள் குந்தி. துர்வாச முனிவரை தியானித்து மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினாள். அவள் உதடுகள் மந்திர உச்சாடனையை முடித்த சில கணங்களில் மூடிய கண்களுக்குள் ஒளி ஊடுருவிப் பாய்வதை உணர்ந்தாள். கண் திறந்தபோது அவள் மந்திரத்தின் சக்தியை கண் முன் கண்டு திடுக்கிட்டாள்.

அந்த நதிக்கரையில் பொன்னிற மேனியுடன் அழகும் ஆண்மையும் நிரம்பிய ஓர் ஆண் மகன் அவள் முன் தோன்றியிருந்தான். அவனைக் கண்டு அவள் விழிகள் கூசின. உடல் அனலால் வாட்டப் படுவதைப் போல சுட்டது. அவனின் பொன்னொளிக் கதிர்களை மறைக்க முகில் திரைகள் ஒருங்கியிருக்கவில்லை. அவள் உடல் விதிர்த்து கை கால்கள் நடுங்கின.. !!

பிழையான வரம் -1

 அந்த நதிக்கரை ஓரம், தன் இள மேனியை வந்து தழுவிச் செல்லும் மென் குளிர் காற்றை உணர்ந்தபடி, பட்டு மேலாடை பறக்க மேற்கை நோக்கி நின்றிருந்தாள் குந்தி. பொன்னொளி படரும் பட்டுத் திரைகளைப்போல மெல்லிய அலையெழும்பிய பர்ணஸா நதியில் வெள்ளி மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.. !!

அவள் உள்ளம் ஒருவித மோன நிலையில் லயித்திருந்தது. முற்றாத, இளம் கன்னிப் பருவப் பெண்ணின் உடல் சிலிர்ப்பில் எழும் மோனலயிப்பு அது. 

அவள் எதிரே நதிநீரலைக்கு அப்பால் சூரியன், முகில் திரள்களுக்குள் மறைந்தும் ஒளிந்தும் விளையாடிக் கொண்டிருந்தான். ஒளியத் தெரியாத குழந்தை ஒன்று தன் தாயிடமிருந்து ஒழிந்து பின் மீண்டும் திரையை விலக்கி வெளியே எட்டிப் பார்ப்பதைப் போலிருந்தது மாலை நேரத்துப் பகலவனின் மறைவு. சாயுங்கால பொன்நிற கதிரொளி பட்டு அவள் கண்கள் கூசினாலும் இமைகளை சிமிட்டிக் கொள்ளும் அவள் உள்ளம் அந்தச் சூரியனையே லயிப்புடன் பார்த்து நெகிழ்ந்து கொண்டிருந்தது.. !!

வெள்ளி மீன்கள் துள்ளி விளையாடும் நதிநீர் அலைகளில் குளித்து வரும் மாலை நேர இளந்தென்றல் நதியின் குளுமையை அள்ளி வந்து அவளின் பொன்நிற மேனியை வருடிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.. !!

அவள் எவ்வளவு நேரம், உள்ளம் மயங்கிய அந்த மோன நிலையில் லயித்து தன்னை மறந்து நின்றிருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. கதிரவன் முற்றாக மறைந்து இருள் கவியத் தொடங்கியபோதுதான் பின்னால் "இளவரசி" எனக் குரல் கேட்டுக் கலைந்தாள்.. !!

தன்னுணர்வு மீண்டதுபோல கலைந்து மேற்கு நோக்கிய விழிகளை மீட்டு கனிந்த முகத்தைத் திருப்பினாள் குந்தி. அவள் மார்பை அணைத்திருந்த கைகள் நழுவிச் சரிந்தன. அவளுக்குப் பின்னால் அனகை வந்து நின்றிருந்தாள்.

"அந்தி இருள் வந்து விட்டது தேவி"

"ஆம்" மோன லயிப்பில் இருந்து உள்ளம் மீளாத அழகிய சிரிப்புடன் தலையசைத்தாள். மீண்டும் திரும்பி முகம் உயர்த்தி பகலவனைப் பார்த்தாள். மேற்கு வானில் முகில்திரள் மட்டுமே தெரிந்தது. இவ்வளவு நேரம் அவளுடன் கண்ணாமூச்சி ஆடிய கதிரவனைக் காணவில்லை. ஒருநொடி முன்னர்தான் அவன் மறைந்திருக்கிறான் என்கிற உணர்வே அவளில் நிலைத்திருந்தது. அவள் உள்ளம் களிப்பிலிருந்து மீளவில்லை. அவள் கண்கள் மீண்டும் மீண்டும் முகில் திரைக்குப் பின் தேடின. குழந்தையென கண்ணாமூச்சி ஆடிய கதிரவனைக் காணவே இல்லை. 

மீண்டும் அனகையின் பக்கம் திரும்பியபோது அவளறியாது ஒரு ஏக்கப் பெருமூச்சு அவளில் எழுந்து நெஞ்சை முட்டியது.. !!

"அழகனடி" என்றாள் மெல்லிய குரலில். 

"யார் தேவி?" லேசான வியப்புடன் கேட்டாள் அனகை. நிழல்போல எப்போதும் உடனிருக்கும் தான் அறியாத ஒரு அழகனை இவள் எப்போது பார்த்தாள் என்கிற திகைப்பை அடைந்திருந்தது அனகையின் முகம்.

"கதிரவன்"

"கதிரவன்.." மேற்கில் நோக்கியபின் மெல்லப் புன்னகைத்த அனகை "மறைந்து விட்டான் தேவி" என்றாள்.

"ஆம்.. ஆனால் இவ்வளவு நேரமும் என்னுடன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தான். நடந்து பழகிய ஒரு குழந்தை அப்போதுதான் தன் தாயிடமிருந்து மறைந்து விளையாடக் கற்றுக் கொள்வதைப் போல.." எனச் சொன்ன அவள் குரல் மிக மிக நெகிழ்ந்திருந்தது. அந்த நெகிழ்வு அவளின் உடல் முழுவதும் படர்ந்திருந்ததை உணர்ந்தாள். அவள் உணர்வுகள் என்றுமில்லாத நெகிழ்வை அடைந்திருந்தன.. !!

நதிக் கரையில் துளிர்த்துத் தழைத்திருக்கும் பசும் புற்களின் மீது கால் வைத்து நடந்தபோது அவள் கால்கள் தரையில் ஊன்றுவது போலவே இல்லை. தரையிலிருந்து சில அடிகள் மேலெழுந்து பறப்பதைப் போலவே இருந்தது.

அனகையுடன் பேசிச் செல்வதுகூட அவ்வளவு மகிழ்வையும் நெகிழ்வையும் தன் உள்ளத்துக்கு அளிக்கும் என்பதை அன்றுதான் அவள் உணர்ந்தாள். அவள் நெஞ்சமெல்லாம் மதுரமாய் இனிப்பது போலிருந்தது. அந்த இனிமையின் தித்திப்பில் லயித்தவளாகவே தன் குடில் இல்லத்துக்குத் திரும்பினாள் குந்தி.. !!

அந்த இனிமையின் தித்திப்பு அவளை விட்டு சிறிதும் அகலவே இல்லை. அவள் நெஞ்சிலேயே பல ஆண்டுகளாக உறைந்தது போல அவளில் நிறைந்திருந்தது. எங்கு நோக்கினும் எதைச் செய்திடினும் அந்த இனிமை ஒன்றே அவளை ஆட்கொண்டது. அவள் உணவுண்டு மஞ்சத்தறைக்குச் சென்றபோதும் அந்த இனிமையிலிருந்து அவளால் மீள முடியவேயில்லை. தித்திக்கும் மோன லயிப்பின் கனவுகளே அவளில் நிறைந்திருந்தன.. !!

மஞ்சம் அவளை அதே இனிமையுடன் அரவணைத்துக் கொண்டது. அவளின் மோன லயிப்புக் கனவுகளையோ நெஞ்சில் தேங்கியிருக்கும் இனிமை உணர்வையோ துளியும் கலைக்கவில்லை. மஞ்சத்தில் புரண்ட அவள் விழிகள் முற்றாகத் திறந்திருக்கவும் இல்லை. முழுதாக மூடியிருக்கவும் இல்லை. அரைக் கண் செருகிய விழிகள் மோனத்திலேயே லயித்திருந்தன. அந்த விழிகளில் கற்பனைகள் விரிந்தபடியே இருந்தன.. !!

நேரம் நெடும்பொழுதைத் தொட்டிருந்த போதுதான் அவள் விழிகள் மூடாமல் மஞ்சத்தில் புரண்டு கொண்டிருப்பதையே உணர்ந்தாள். அவள் விழிகள் சற்று களைத்து கனவுகள் கலைந்து தன்னுணர்வு மீண்டது போலிருந்தது. அப்பொழுதுதான் தன் உள்ளம், சூரியனை ஒரு கைக்குழந்தையென கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தாள் குந்தி.. !!

இவ்வளவு நேரமும் அவள் ஒரு தாயாகவே தன்னை எண்ணியிருந்தாள். சூரியனே அவளின் கைக் குழந்தையென்றாகியிருந்தான். சூரியனை அள்ளி எடுத்து, மார்போடணைத்து முத்தமிட்டாள். உயரத் தூக்கிச் சுழற்றி விளையாடிக் கொஞ்சினாள். சூரியனை நிதியில் குளிக்க வைத்து தலை துவட்டினாள். பட்டாடை உடுத்தி ஓடிப் பிடித்து விளையாடினாள். அவன் அழும் முன்பே அவனின் பசியை உணர்ந்து தன் முலையூட்டினாள். இன்னும் இன்னும்... எவ்வளவோ கற்பனைக் காட்சிகள் அவளில் எழுந்திருந்தன. அதெல்லாம் நீர்க்குமிழியென்றாகி சட்டென உடைந்து போனதை அப்போதே உணர்ந்தாள்.. !!

விரும்பிப் படித்தவை.. !!