வியாழன், 6 ஜூன், 2024

முத்தம் பெறும் நட்சத்திரம் -2

 


"அப்பறம் இப்ப எப்படி இருக்க?'' என்று தன் எதிரில் தயக்கத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்த கமலியின் முகத்தை மிக அருகில் பார்த்துக் கேட்டான் நிருதி. 


பேன் காற்று தலைக்கு மேல் மெதுவாக விசிறிக் கொண்டிருந்தது.


கமலி இயல்பாக இல்லை என்பது அவள் உட்கார்ந்திருக்கும் விதத்திலேயே தெரிந்தது. 


பெண்மைக்கே உரிய கூச்சம் அவளில் தங்கியிருந்தது. 


இதுபோன்ற பொதுவெளி அவளுக்கு பழக்கமில்லாமல் இருக்கலாம். அல்லது ஒரு ஆணுடன் இப்படி வந்து அமர்ந்திருப்பது அவளை அச்சத்துக்கு ஆளாகியிருக்கலாம் என்று நினைத்தான்.


உண்மையில் அவனைச் சந்தித்தபோது அவளிடமிருந்த இயல்பும் நட்புணர்வும் இப்போது அவளை விட்டு முற்றிலுமாக நீங்கி விட்டதைப் போலிருந்தாள். 


ஆனால் தன் கூச்ச உணர்ச்சியை உள்ளே அடக்கி தான் இயல்பாக இருப்பதாக காட்டிக் கொள்ள முயல்வதை அவனால் உணர முடிந்தது.


"நல்லாருக்கேன்'' என்று முடியை ஒதுக்கி மென்னகை புரிந்தாள்.


 அருகிலிருக்கும் டேபிள்களில் அமர்ந்திருந்தவர்கள் அவரவர் பேச்சில் மூழ்கியிருந்தனர். அவர்களைப் பொருட்படுத்துவது அவசியமற்ற ஒன்றென அவன் உணர்ந்தான். 


''வீட்டுக்காரர் என்ன பண்றாரு?'' கமலியின் கண் பார்த்துக் கேட்டான். 


''ம்ம்'' மெல்லத் தலையசைத்தாள். ''நீங்க நல்லாருக்கீங்களா?''


''ரொம்ப நல்லாருக்கேன். எப்போ கல்யாணமாச்சு உனக்கு?"


''பையனுக்கு இப்ப அஞ்சு வயசாகுது.''


''ஹோ.. ஸ்கூல் சேத்தாச்சா?"


"ஓஓ.. போறான்"


"சொந்தத்துல கல்யாணமா உனக்கு?"


''சொந்தம்லாமில்ல"


''பாத்து பண்ணதா?'' 


''ம்ம்.. அப்படித்தான். உங்களுது லவ் மேரேஜா?''


''கிட்டதட்ட.. லவ் அண்ட் அரேன்ஜ்டு'' என்றான்.


குளிர்பானம் அருந்திய தன் தடித்த உதடுகளை நுனி நாவால் வருடி மேலும் ஈரம் செய்து கொண்டபின் கனத்து புடைத்தகன்ற நெஞ்சு விம்மியெழ ஒரு பெருமூச்சு விட்டு மிகவும் தணிந்த குரலில் சொன்னாள். 


''உங்களை நான் அடிக்கடி நெனச்சுக்குவேன்''


''ஏன்?''


''உங்களை எனக்கு அவ்வளவு புடிக்கும்''


''நாமதான் பழகவே இல்லியே?''


''பழகினாத்தானா?'' எனக் கேட்டு மெதுவாக அசைந்து முன்னால் சரிந்த மாதிரி உட்கார்ந்து புடவைத் தலைப்பை இடது கையில் பற்றி எடுத்து வாயோரங்களில் ஒற்றி எடுத்து பின் சொன்னாள்.


 ''அப்பவே நான் உங்ககூட பேசி பழக ரொம்ப ஆசைப்பட்டேன். எப்படியாவது ஒரு தடவையாவது உங்ககூட பேசிடணும்னு நெனைப்பேன். ஆனா என்னோட சூழ்நிலைய நெனச்சு கூச்சப்பட்டு பேசாமயே இருந்துட்டேன். இருந்தாலும் டெய்லியும் மனசுக்குள்ள உங்ககூட பேசுவேன். ஸ்கூல்ல கிளாஸ்ல பாடம் நடக்கறப்பகூட என் நெனப்பு எல்லாம் உங்க மேலதான் இருக்கும்."


"பார்ரா.." என்று சிரித்தான். 


"அப்ப உங்கள நெனைக்கறதுனா எனக்கு அவ்வளவு புடிக்கும். அந்த உலகத்துல நான் நீங்கனு நாம ரெண்டு மட்டும்தான்" 


அந்த நினைவுகளை இப்போதும் உணர்வதைப்போல அவள் முகம் வெட்கத்தில் கனிந்தது.


"அருமை.. அப்ப நீ என்னை லவ் பண்ணியிருக்க?'' 


''ம்ம்.. ரொம்ப டீப்பா லவ் பண்ணேன். ஆனா என் தகுதிக்கு நீங்க எனக்கு கெடைக்க மாட்டீங்கனு தெரியும். அதனாலதான் எதுவும் காட்டிக்கல. ஆனா என் மனசை என்னால ஒண்ணும் பண்ண முடியல''


"நல்ல பொண்ணுதான் மனசுக்குள்ளயே டெவலப் பண்ணி வெச்சிருக்க"


"எனக்கு அதான் புடிச்சுது"


"அழகு. ஆனா நானும் உன்னை லவ் பண்ணேன் தெரியுமா'' என்று சிரித்தபடி சொன்னான்.


பெண்மைக்கே உரிய நாணத்தின் உளக் கூச்சத்தில் உடலசைத்து வெட்கி நெளிந்தாள். 


மூக்குத்தி அணிந்த கூர் மூக்கு விரிந்து கொழு கன்னங்கள் குழைய கண்கள் நிறைய காதலைத் தேக்கி அவன் விழிகளைப் பார்த்துச் சிரித்தாள்.


''கேக்கவே ரொம்ப சந்தோசமாருக்கு'' என்று மெதுவாக உதடுகள் அசைத்து முனகினாள்.


அவளின் மென்மயிர் மினுக்கும் கன்னக் குழைவையும் மெலிதான ஈரத்தில் கனிந்த இதழ்களையும் முத்தமிடும் ஆவல் உள்ளெழுவதை உணர்ந்தபடி அதே மெல்லிய குரலில் அவனும் சொன்னான்.


''ஆனா சொல்லிக்கத்தான் முடியல''


அவன் சொல்லில் எழும் ஏக்கம் அவளின் உள்ளாழத்தைத் தொட்டதுபோல மூச்சை இழுத்து பரந்தகன்று விரிந்த நெஞ்சில் செழுமை பெற்றுத் திரண்டிருக்கும் திட முலைகள் விம்மியெழப் பெருமூச்சொன்றை வெளியேற்றினாள். 


டேபிள் மீது வைத்திருந்த தன் கை விரல்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்தபடி கேட்டாள்.


''உங்களுக்கு அப்ப என்னை புடிச்சுதா?''


''புடிச்சுது.'' 


''ம்ம்'' முனகினாள். "நான் அழகாருந்தனா?"


''அப்ப நீ உயரமா ஒல்லியாத்தான் இருப்ப. இறுக்கி புடிச்சா உன்னோட இடுப்பு ஒடஞ்சுருமோனுகூட தோணும். ஆனா அழகாத்தான் இருப்ப. மூக்கு நீண்டு கன்னமெல்லாம் லேசா பருவோட கொஞ்சமா உப்பி சின்ன ஒதடுகளோட கழுத்து நீண்டு இருக்குற உன்ன பாக்க எனக்கு ரொம்ப புடிக்கும். நான் பாக்கறப்பெல்லாம் உன் முகம் ரொம்ப சாந்தமா அமைதியா ஏதோ ஒரு சோகத்துல இருக்குற மாதிரி  இருக்கும். அப்படி பாக்கறப்ப உன்மேல என்னையறியாம எனக்கு ஒரு பீல் வரும்''


''என்ன பீல் ?''


''வேண்டாம். இப்ப சொன்னா நல்லாருக்காது''


''பரவால.. சொல்லுங்க..?''


''விடுப்பா.. இப்ப எதுக்கு?''


''ம்ம்'' முனகி முகம் திருப்பி அருகில் பார்த்துவிட்டு மீண்டும் அவன் முகத்தில் தன் பார்வையை நிறுத்தினாள். 


மெல்ல, "அந்த மாதிரி பீலா?"


"எந்த மாதிரி? "


"ஒரு பொண்ணு மேல வர ஆசை?"


"ச்ச.. ஏய் அந்த மாதிரி இல்ல.."


"சொல்லுங்க.." குழைந்தாள்.


"விடு.. இப்ப வேண்டாம்"


"நான் நெனைச்சிருக்கேன்" என்றாள்.


"என்ன? "


"நீங்க அப்ப என்கிட்ட வந்து பேசியிருந்தா.. நான் ஓகே சொல்லியிருப்பேன்"


"அட.. எனக்கு இது தெரியாம போச்சே?"


"உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நான் அதிகமா நேசிச்சது உங்களை மட்டும்தான். உங்களை கல்யாணம் பண்ணி.. உங்களுக்கு பொண்டாட்டியா வாழ முடியாட்டியும்.. உங்கள லவ் பண்ணி கொஞ்ச நாளாச்சும் உங்ககூட ஆசைப்படி வாழ்ந்துடணும்னெல்லாம் ரொம்ப பீல் பண்ணியிருக்கேன்."


"நெஜமாவா?"


"உண்மைய சொன்னா..."


"ம்ம்?"


மிகவும் தணிந்து குரலில்,

 "ஏன்னே தெரியல. உங்கள பாக்கறது தவிர உங்களோட பேசி பழகினதில்ல. ஆனாலும் அதுக்கே உங்க மேல நான் பைத்தியமா இருந்தேன். நீங்க மட்டும் ஒரு தடவை என்கூட பேசியிருந்தாலும் போதும். நான் உங்க பின்னாடி நாய்க்குட்டி மாதிரி வந்துருப்பேன்" என்றாள். 


திகைத்துப் பார்த்தான் நிருதி.


மெல்ல நெளிந்தமர்ந்து அதே மென்குரலில் தொடர்ந்தாள்.


''சைக்கிள்ள போறப்ப நீங்க என்னை மட்டும் தனியா ஒரு பார்வை பாத்துட்டு போவீங்களே. அந்த ஒரு பார்வை எனக்குள்ள பூந்து என் மனசையே சுண்டி இழுக்கற மாதிரி இருக்கும். அப்ப என்னையறியாம எனக்கு கை கால் எல்லாம் நடுங்கும். ஒடம்பு ஒரு மாதிரி ஆகி தொண்டை வறண்டு போகும். ஆனாலும் அந்த ஒரு பார்வைக்காகவே டெய்லி அந்த டைம்க்கு ரெடியாகி வந்து பஸ் ஸ்டாப்ல நின்னுக்குவேன். அது எனக்கு பொக்கிஷம் மாதிரி. நான் பஸ் ஸ்டாப்ல வந்து நின்னு ரொம்ப நேரம் கழிச்சுதான் பஸ் வரும். நான் முன்னாடியே போய் நிக்கறதுக்கு எங்கம்மா கூட என்னை திட்டும். ஆனா நான் கேக்கவே மாட்டேன்''


''ஆஹா..'' கனிந்து சிரித்தான். ''ம்ம்.. எனக்கு அப்ப இது தெரியாம போச்சே. நீ என்னை பாப்பேனு தெரியும். ஆனா இவ்வளவு பீலாகியிருப்பெனு தெரியல''


''அது என் மனசுக்குள்ள வந்த மொத லவ்''


"மொத லவ்..?"


"ஆமா.. எவ்ளோ ஆசை.. எவ்ளோ கனவு.."


''சரிதான். அதெல்லாம் இன்னும் இருக்கா?''


"ஏன் இல்லாம?"


"வாவ்.. சூப்பர் "


''மறக்குமா?''


"மறக்காதா?"


"மறக்காது"


சிரித்து ''சரி. இப்ப உங்கம்மா எப்படி இருக்காங்க?''


''இல்ல. செத்துருச்சு'' என்றாள். 


லேசாக துணுக்குற்றான்.


''ஓஓ.. எப்ப? ''


''அது.. ஆச்சு ரெண்டு வருசத்துக்கு மேல''


''நல்லாத்தான இருந்தாங்க. எப்படி?''


''ஒடம்புக்கு முடியாம படுத்து அப்படியே போயிருச்சு. வயசும் ஆகிருச்சு. நான் ப்ளஸ் டூ முடிக்கறதுக்குள்ளயே ஒடம்பு ரொம்ப முடியாம ஆகி ஆஸ்பத்ரியே கதினு இருந்துச்சு. அப்பறம் நான் படிக்கறதை விட்டுட்டு வேலைக்கு போயிட்டேன்''


''நீ ப்ளஸ் டூ முடிக்கலியா?''


''ம்கூம்'' தலையை ஆட்டினாள்.


''அட.. சரி.. என்ன வேலைக்கு போன?''


''கட்டட வேலைக்குத்தான். எங்கம்மா போன எடத்துக்கே நானும் போனேன். நான் போன கொஞ்ச நாளுக்கப்பறம் எங்கம்மாவுக்கு வேலை செய்ய முடியாம ஆகிருச்சு'' என்று விட்டு ஒரு பெருமூச்சு விட்டு மெல்லச் சொன்னாள், ''நான் பொறக்கறப்பவே எங்கம்மாக்கு முப்பத்தஞ்சு வயசுக்கு மேல''


அவளின் அம்மா அவன் நினைவில் வந்து போனாள். 


அவளும் ஒல்லிதான். இவளைப்போலவே மாநிறம், உயரம், இவள் தன் தாயைக் கொண்டு பிறந்திருக்கிறாள். 


இவள் அம்மா கணவன் இல்லாவிட்டாலும் ஊருக்குள் வேறு எந்த கெட்ட பெயரும் எடுத்ததில்லை. 


அதைப்போலவே இவளையும் ஒழுக்கமாகத்தான் வளர்த்திருந்தாள். அது ஒன்றுதான் அபபோது இவள்மீது அவனுக்கு காதல் வரக் காரணமாக இருந்தது.. !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!