வியாழன், 1 ஆகஸ்ட், 2024

ஈரமான தாழம் பூ -1

 கோடை வெப்பம் தணிந்து, மழை காலம் துவங்கியிருந்தது. காற்றில் மழையின் ஈரம், ஆனாலும் தூரல் இல்லாத  அன்று இரவு -


விளக்கை அணைத்து ஷட்டரை இறக்கிப் பூட்டுப் போட்டு கடையை அடைத்ததும்.. பாக்கெட்டைத் தடவிக் கொண்டே சீனு அண்ணா என்னைப் பார்த்தார். 


"நிரு.. நீ போறியா?"


"நீங்க?" நான் அவரைக் கேட்டேன்.


"நீ போ.. நான் வரேன்.."


அவரின் கவனம் சிந்தனை எல்லாம் வேறு எங்கோ இருந்தது. அது எங்கே என்று எனக்கு மிக நன்றாகவே தெரியும்.


"கிரி கேட்டா..?" என்று சற்று தயக்கமாக அவரைக் கேட்டேன்.


"ஆமா கேப்பா.. கேட்டான்னா..  வரேனு சொல்லு.."


அவர் மீது சட்டென ஒரு எரிச்சல் வந்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் நான் மௌனமாகக் கிளம்பினேன்.


"இந்தாடா.." என்றார்.


நான் நின்று அவரைப் பார்த்தேன்.


என் கையில் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தார்.


"உன் செலவுக்கு வெச்சிக்க. கிரிஜா கேட்டான்னா எதையாவது சொல்லி சமாளி..! ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்குங்க.."


எனக்குப் புரிந்தது. 


இன்று இரவு அவர் வீட்டுக்கு வரப் போவதில்லை. இதை நான் அவரது மனைவியான கிரிஜாவிடம் சொல்லாமல் வேறு எதையாவது சொல்லி சமாளித்தாக வேண்டும்.


எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அந்தக் கொடுப்பினை எனக்கு இல்லை. ஆனால் இந்த ஆள், அவளிடம் என்ன குறயைக் கண்டான்? ஏன் இப்படி கிரியை விட்டு அந்தக் கிழட்டு மூதியைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறான்?


என்னவோ அந்த எழவெல்லாம் ஒன்றும் புரியவில்லை எனக்கு. 


"கிரியிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தபடி.. நான் கடையை விட்டு இறங்கி நடந்தேன்.


இரவு நேரம் என்பதால் கடைகள் எல்லாம் மூடப் பட்டிருந்தன. தெரு விளக்குகள் அவ்வளவு பிரகாசம் இன்றி சோபையாக எரிந்து கொண்டிருந்தன. அளவான வாகனப் போக்குவரத்துகள் மட்டும்தான். 


ஐந்து நிமிட நடையில், அதிக போக்குவரத்து இல்லாத அந்த தெருவில் நுழைந்தேன். அந்த தெருவே அமைதியாகத்தான் இருந்தது.


ஒரே ஒரு நாய் எனக்கு எதிராக ஓடிவந்து நின்று என்னைப் பார்த்து குலைக்கலாமா வேண்டாமா என்று யோசித்து, வேண்டாம் என்கிற முடிவில் திரும்பி ஓடி பக்கத்து சந்துக்குள் புகுந்து கொண்டது.


வீதியில் இருந்த வெளி கேட்டுகள் பூட்டப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டு சன்னல்கள் மூடப்பட்டு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.


தெரு விளக்கு மின் கம்பத்தை ஒட்டியிருந்த வீட்டை அடைந்து, சின்ன காம்போண்ட் கேட்டைத் திறந்து வாசற்படியேறி மெதுவாகக் கதவைத் தட்டினேன்.


"டொக்.. டொக்.."


உள்ளே டிவி சத்தம் கேட்டது. பின் கொலுசு சத்தம். கதவின் தாள் "க்ளக்" கென சத்தம் எழுப்ப, கதவு விலகியது.


கதவின் இடைவெளியில் கிரிஜா நின்றிருந்தாள். 


இளம் பச்சை நிறப் புடவையை உடலுக்குக் கொடுத்திருந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருந்தாள். தலையில் வைத்திருந்த பூ கமகமவென மணம் வீசியது. 


மாலையில் கோவிலுக்குப் போய் வந்தாளோ என்னவோ..!


 கதவை திறந்தவள் எனக்கு பின்னால் பார்வையை வீசித் தேடிவிட்டு சின்ன ஏமாற்றத்துடன் கேட்டாள்.


"எங்கடா.. அவரு..?"


"வரேன்னாரு."


"எப்ப..?"


சிரித்தேன்,


 "அதெல்லாம் சொல்லல.. வருவாரு.."


அவள் முகம் சட்டென கோபத்துக்குப் போனது. மூக்கு விடைக்க என்னை முறைத்துப் பார்த்தாள்.


"எங்கடா போனாரு..?"


சமாளித்தாக வேண்டுமே..?


"தெரியல.. சரக்கு போடுறது விஷயமா ஒருத்தர பாத்துட்டு வரேன்னாரு." என்றேன்.


சட்டென என் காதைப் பிடித்து திருகினாள்.


"பொய் சொல்லாம சொல்லு.. எங்க போனாரு..?"


"ஆஆ.. நெசமாத்தான் கிரி.."


"என்கிட்டயே பொய் சொல்றியா..? அந்தாளு வர்றவரை.. உனக்கும் சாப்பாடு கிடையாது..!" என்று என் காதை விட்டாள்.


நான் சிக்கன சிரிப்பைக் காட்டிவிட்டு தயக்கத்துடன் உள்ளே போக எனக்குப் பின்னால் கதவைச் சாத்தி தாள் போட்டாள். 


நான் நேராக எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் போய் உடை மாற்றினேன். அதன்பின் பாத்ரூம் சென்று கை கால் முகம் கழுவி வந்தேன். 


கிரிஜா டிவி முன் உட்கார்ந்திருந்தாள். அவள் முகம் கோபமாகத்தான் இருந்தது.  என்னை முறைத்துப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 


"கோவிலுக்கு ஏதாவது போனியா கிரி?" அவள் முகம் பார்த்தபடி கேட்டேன்.


அவள் ஒன்றும் பேசவில்லை.


"இப்படி அம்சமா புடவை கட்டி, நெத்தில குங்குமம் வெச்சு தலை நெறைய பூவோட பாக்க ரொம்ப அழகா இருக்க"


என் புகழ்ச்சி அவளை சற்றே இளகச் செய்து விட்டது.


இதழோரம் லேசாகப் புன்னகை காட்டினாள்.


"பசிக்குது" மெல்லச் சொன்னேன். 


"அந்தாளு வந்தாத்தான் உனக்கு சோறு" என்றாள்.


அவர் வரமாட்டார். ஆனால் அதை இவளிடம் சொல்ல முடியாது. அவர் வரவில்லை என்றால் எனக்கும் உணவில்லையாம். எனில் இன்றைய இரவு எனக்கு பட்டினிதானா?


'புருஷனை கைக்குள்ள போட்டுக்க துப்பில்ல.. இதுல என்னை பழிவாங்கறா'


என்ன கொடுமைடா லிங்கேஸ்வரா.. !!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

how dog reacted in road is v natiral… these kind of small details are v good in your stories

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!