சனி, 21 செப்டம்பர், 2024

மாறுதல் சில நேரங்களில் -6

 திலகத்துக்கு இரவெல்லாம் உடம்பு முழுக்க இம்சையாக இருந்தது. வெப்பம் ஏறி பெருமூச்சு பொத்துக்கொண்டு வந்து நெஞ்சு படபடத்தது. 


தூக்கம் வர மறுத்தது. கண் சொக்கித் தூங்கியபோதும் திடுக் திடுக்கென விழிப்பு வந்தது. 


தாங்க முடியாத அவஸ்தை உண்டாகி கணவர் மேல் வந்த கோபத்தில் கண்டபடி திட்ட வேண்டும் போலிருந்தது.


நினைக்க நினைக்க வெறுப்பாக இருந்தது.. !!


காலையில் கணவர் முகம் சுத்தமாக களையிழந்து போயிருந்தது. 


அவர் முகத்தைப் பார்த்தே அவளும் பேசவில்லை.


அமைதியாக காலை டிபனை முடித்துக் கொண்டு சுகர் மாத்திரை போட்டுக் கொண்டு அவள் போட்டு வைத்திருந்த லஞ்ச் பேகை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது சொன்னார். 

“ஸாரி திலகம். வரேன்”


“கோபமா?” சட்டெனக் கேட்டாள். 


“இல்ல”


“ஐயாம் ஸாரி. அப்ப செம கோபம். அதான் அப்படி பேசிட்டேன்”


“பரவால விடு”


“என்னை மன்னிச்சிருங்க. எனக்கும் அப்படி பேசிட்டதை நெனைச்சு மனசு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு”


“பரவால விடு. என்னைத்தான பேசின? எனக்கு கோபமில்லை. என்னால உன்னை சந்தோசப் படுத்த முடியலயேன்ற வருத்தம்தான்”


“ஆசைய தூண்டிவிட்டு கடைசில ஏமாத்திட்டிங்க. அதான். சரி.. அதை மறந்துட்டு போய் வேலையை பாருங்க. மனசை போட்டு அலட்டிக்க வேண்டாம். நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்”


“இல்லை. நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்”


“ரெண்டு பேரும் கேட்டுகிட்டாச்சு. போதும்” என்று கண் கலங்கிச் சிரித்தாள்.


“நீ பேங்க் போறியா இன்னிக்கு?”


“ஆமா போகணும். லெட்டர் வந்துருக்கு, வட்டி கட்டற டைமாச்சு”


“பீரோல பணம் வெச்சிருக்கேன். எடுத்துக்கோ. வரேன்” முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டே கிளம்பி விட்டார்.


திலகத்துக்கு கண்கள்கூடக் கலங்கியது. 

‘சே நான் எப்படிப்பட்ட பெண். இப்போது எப்படி பேசுமளவுக்கு மாறிப் போனேன்.? பாவம் அவர். உடலால் எதுவும் முடியாதபோது அவர்தான் என்ன செய்வார்?’


நினைக்க நினைக்க ஆற்றாமையோடு கோபமும் வந்தது. 


மாலதி வந்தாள். நைட்டியை தூக்கிச் செருகியிருந்தாள். கூந்தலைச் சுருட்டி உச்சியில் க்ளிப் குத்தியிருந்தாள்.


“அக்கா” கதவைத் தாண்டி வரும்போதே சத்தமாகக் கூப்பிட்டுக் கொண்டு வந்தாள்.


“வாடி”


“வேலை முடிஞ்சுதா?”


“என்ன வேலை இங்க.? உக்காரு”


“ஏன் டல்லா இருக்கீங்க?  என்னாச்சு.. முத்தம் குடுக்கலேனு மாமாகூட சண்டையா?”


“ஆமா.. உங்க மாமா அப்படியே முத்தம் குடுத்து தள்ளிட்டாலும் ஒதடெல்லாம் தீஞ்சு போயிரும். போடி காலைல வந்து எரிச்சலைக் கிளப்பாதே”


“மாமா அறுத்து தள்ளாமத்தான் ரெண்டு புள்ளைகள பெத்திங்களாக்கும்?”


“என்ன சண்டை போட வந்தியா காலைல?”


“கடைக்கு வந்தேன். கதவு தெறந்திருந்ததைப் பாத்ததும் உள்ள வந்துட்டேன். ஸ்கூல் போகலியா?”


 “நான் பேங்க் போகணும்டி. பேங்க் வேலையை முடிச்சுட்டுதான் ஸ்கூலுக்குப் போகணும்”


“பேங்க்குக்கு எப்ப போறீங்க?”


“கிளம்பணும். வரியா?”


“இல்லக்கா. எனக்கு இன்னிக்கு எங்கயும் நகர முடியாத அளவுக்கு வேலை இருக்கு.”


“என்னடி வேலை அப்படி?”


“மத்யானமா ஊர்லருந்து மாமனார் மாமியார் வராங்க. வீட்டை சுத்தப் படுத்தி பளபளனு ஆக்கணும். பெருசுக ரெண்டும் மண்டைய போட்டும் தொலைய மாட்டேங்குது” அவள் கவலை அவளுக்கு.


“பாவம்டி அவங்க. இன்னும் எத்தனை வருசம் வாழ்ந்துர போறாங்க?”


“உங்களுக்கென்ன தெரியும் அதுகளை பத்தி? நல்லவேளை உங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்ல. அதனாலதான் இப்படி பேசறீங்க. சரி நான் போறேன். கடைக்கு போகணும்.  நின்னு பேச நேரமில்ல. நீங்க போயிட்டு சாயந்திரம் வாங்க. அப்பறமா என் வீட்டுக்கு வாங்க. நாலு நாளைக்கு இருப்பாங்க. என்னோட மாமனார் மாமியாரையும் ஒரு கண்ல பாத்துக்குவீங்களாம்”


“வரேன்” என்றாள் திலகம். 


“செரிக்கா நான் போறேன். சாயந்திரம் வீட்டுக்கு வாங்க”


மாலதி வெளியே போனதும் போன் அடித்தது. எடுத்தாள் திலகம். 


தனுசுயா!


“தனு” என்றாள் எடுத்து. 


“அக்கா..  என்ன பண்ற? ஸ்கூல் கிளம்பிட்டியா?”


“இல்லடி. பேங்க் போகணும். கிளம்பலாம்னு இருந்தேன். நீ கால் பண்ணிட்ட. ஏன்டி வேலைக்கு போகலியா?”


“போகலக்கா. ஒரே கடுப்பா இருக்கு. அதான் லீவ் போட்டுட்டேன் இன்னிக்கு. உங்க சித்தி உன்கிட்ட பேசணுமாம். இப்ப பேசறியா? இல்ல பேங்க் போயிட்டு வந்து அப்பறமா பேசறியா?”


“குடு நாலு வார்த்தை பேசிர்றேன்”


போன் கை மாறியது. 


“திலகா.. ஸ்கூலுக்கு போகலையா சாமி?” சித்தி பாசமாகக் கேட்டாள்.


“பேங்கவரை போகணும் சித்தி. இன்னும் பொறப்படல. இனிமேதான்..”


“நீ வந்துட்டு போனியே நேத்திக்கு. அதுக்கப்பறமும் இவ எங்ககூட ஒரே சண்டை. ராத்திரி பூரா எனக்கு மனசே செரியில்ல போ”


“சித்தி.. ரொம்ப கவலைப் படாதிங்க. அவளுக்கு இன்னும் வயசு இருக்கு. ஏதாவது ஒண்ணு அவளுக்கு தகுந்த மாதிரி அமையும். நீங்க கவலைப் பட்டு அவளையும் தொல்லை பண்ணாதிங்க”


“நீ என்ன சொல்லு திகலா. நாளாக நாளாக எனக்கு ரொம்ப கவலையாத்தான் இருக்கு. இவளை நெனைச்சு நெனைச்சே தொண்டைக்குள்ள சோறு எறங்க மாட்டேங்குது. நைட்ல தூங்க முடிய மாட்டேங்குது. இங்கயும் யார் யாருகிட்டல்லாமோ சொல்லிப் பாக்கறேன். இவளுக்கு ஏத்த மாதிரி ஒண்ணு கூட ஒத்துவர மாட்டேங்குது. வரவன்லாம் அனியாயத்துக்கு கெழவனுகளாவே இருக்கானுக. நேத்து வந்த ஆளு உன் புருசனைவிட பெரிய வயசுக்காரன். இப்படியுமா ஒரு அனியாயம் நடக்கணும்? கூட்டிட்டு வந்த ஆளை செருப்புல போடணும்போல ஆத்தரம் வந்துச்சு எனக்கு. ஆனா என்ன பண்றது? ரெண்டாங் கல்யாணம்னா ஒரு நாயும் மதிக்க மாட்டேங்குது. இவளுக்கு அப்படி என்ன சாமி வயசாகிப் போச்சு. ஆளும் நல்லாதான் இருக்கா. ஆனா பாரு.. ரெண்டாம் கல்யாணம்ன்றதும் ஒடம்பா இருக்கறதும்தான் பிரச்சினைனு ரொம்ப நோகடிக்காறாங்க.. எனக்கா.. ஒரு பக்கம் ரொம்ப கவலையாவே இருக்கு”


பேச்சு நீண்டு, மணியாகியது. சித்தி முடிப்பதாகத் தெரியவில்லை. புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தாள்.


“சித்தி நான் பேங்க் போகணும். இருங்க. நான் போய்ட்டு வந்து ஸ்கூல்லருந்து பேசறேன்” என்று சொல்லிவிட்டுப் போனை வைத்தாள். 


கதவைச் சாத்திவிட்டு பாத்ரூம் போய் அவிழ்த்துப் போட்டு நின்று தன் உடம்பையே பார்த்துக் கொண்டவளுக்கு நேற்றிரவு என்ன தைரியத்தில் கணவனிடம் அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசினோம் என்றிருந்தது.  


அவரால் முடியவில்லை என்பது ஒரு குறைதான். ஆனால் இந்த வயதுக்கு மேல் என்னை எவன் சீந்துவான்.. ??


தப்பு தப்பு தப்பு.. !!


பொதுபொதுவென ஊதிப்போய்க் கிடக்கும் இந்த உடம்பை வைத்துக் கொண்டு நான் அப்படிப் பேசியது மிகப் பெரிய தவறு.. !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக