ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

அதிர்ஷ்டமும் உழைப்பும்.. !!

 ஒருவனுக்கு நல்ல நேரம் கூடி வந்தால் குப்பையில் கிடப்பவனையும் கோபுரத்தில் ஏற்றி வைக்கும். 

அதே நேரம் அதிர்ஷ்டம் என்பது வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். உழைப்பு என்பது அதில் வெற்றியைத் தேடித் தரும்.

அதிர்ஷ்டமும் உழைப்பும் கைகூடினால் பேரையும் புகழையும் அள்ளிக் கொடுக்கும்.

அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி, சோம்பிக் கிடப்பவனுக்கு வெற்றி நீடிப்பதில்லை, என்பதற்கு உதாரணம் இந்தக் கதை. 

பதிமூன்று வயதில் படிப்பு போச்சு.. வீட்டில் ஏழ்மை.. தொடர்ந்து பல நாட்களாக பசி... வேலை தேடித் தேடி அலுத்துப் போச்சு... ஒருநாள், பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்த சிறுவன். 

ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.

பையனிடம், ”டேய் இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.

ஆஹா… இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். 

நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார். வெளியே நிற்பது தன் குதிரை தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தை பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். 

சற்று அதிகமாக பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான்.

மறுநாள், நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரை லாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான்.

அதோடு விட்டானா..? நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன் தான், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாமேதை ஷேக்ஸ்பியர்.

அறிவு தாகம் ஏற்படாமல் போயிருந்தால் அவர் உலகப் புகழ் பெற்றிருக்க முடியாது. குதிரை லாய முதலாளியாக மட்டுமே இருந்திருப்பார்... !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக