ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

சிபு -1

 என் இருபத்தியிரண்டு வயதில் நான் தனிமைப் பட்டிருந்தேன். 


வேலையில்லாத நிலை அல்ல, நானாக வேலையைப் புறக்கணித்திருந்தேன். 


வெளியுலக, உறவுகளின் சுயத்தைக் காணத் தொடங்கிய அனுபவங்களின் தாக்கத்தில், கொந்தளிப்படைந்து ஆன்மீகம், தியானம் செய்தல் என்றிருந்தேன்.


 உறவுகளோடும் அவ்வளவு ஒட்டுதல் இல்லை. மனித மனங்களின் வக்கிரங்களை எதிர்க்கும் நிலையின் உச்சத்திலிருந்த காலகட்டம் அது.


எங்கள் ஏரியா ஒரு சிறிய மலைப் பகுதி. கரடு என்று பெயர்.


 அங்கு பெரும்பாலான குடியிருப்புகள் எல்லாம் மலையடிவாரத்திலும் அதன் ஓரளவு மேல் பகுதியிலும்தான். உச்சியில் வெகுசில வீடுகள்தான்.


 மலையின் உச்சியில் ஒரு சமதளப் பகுதி உண்டு.


 அது முன்பு வனப்பகுதியாக இருந்தது. இப்போது குடியிருப்புகளுக்காக அதை அழித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. எல்லாமே இலவச வீடுகள்.


 ஆனால் மின்சார வசதியும், போதுமான அளவு தண்ணீர் வசதியும், வாகனப் போக்குவரத்து வசதியும் இல்லாததால் கட்டிய வீடுகள் எல்லாம் சில வருடங்களில் அப்படி அப்படியே கைவிடப்பட்டன.


 இறுதியில் அங்கே குடியிருந்தது எங்கள் குடும்பம் மட்டும்தான்.


 அங்கே என் வீட்டுக்குப் பக்கத்தில் காலியாக இருந்த ஒரு வீட்டில் நான்  வாடகைக்கு இருந்து கொண்டிருந்தேன். 


என்னுடன் ஒரு நண்பன் மட்டும் இரவில் வந்து தங்குவான். விடுமுறை என்றால் பகலில். மற்ற நண்பர்கள் அவ்வப்போது வந்து செல்லக் கூடியவர்கள்.


மேலே வருவதற்கு படிக்கட்டுகள் வழியாக நடந்துதான் வர வேண்டும்.


 மலைப் பகுதிகளில் நடந்து பழக்கமில்லாதவர்கள் இரண்டு மூன்று இடங்களில் நின்றோ உட்கார்ந்தோ இளைப்பாறித்தான் வரவேண்டும்.


 அப்படித்தான் ஒரு நாள் மூச்சு வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தாள் அவள்.


 அவளை அங்கு அழைத்து வந்தவன், அவ்வப்போது என்னைக் காண வந்து செல்லும் என் நண்பர்களில் ஒருவனான சிக்கந்தர்பாஷா. 


அவன் நகரத்துக்குள் குடியிருந்தான். ஆனால் வாடகை வீடுதான். அப்பா இல்லை. அம்மாவும், ஒரு அக்காவும், ஒரு தங்கையும்.


 குடும்ப பாரத்தைத் தாங்குவதோடு அக்கா தங்கையையும் அவன்தான் உழைத்துக் கரையேற்ற வேண்டும். 


அப்போது ஒரு தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தான். அதை நிறுவனம் என்று பெரிய அளவில் சொல்லிவிட முடியாது. சிறிய அளவிலானது. அங்கே அவன் கடைக்குட்டியாக இருந்து தேறியவன். 


அந்தக் காலகட்டத்தில் அவன் முதலாளியின் அம்மா, நோய்வாய்ப் பட்டு படுத்த பக்கையாக இருந்தாள்.


 அவளை கவனிக்கச் சில மாதங்களுக்கொரு முறை தாதிப்பெண்கள் மாறி மாறி வருவார்கள். அதில் பெரும்பாலானவர்கள் கேரளத்துப் பெண்கள்.


 அப்போது ஒரு தமிழ்ப்பெண், அதிலும் முகமதியப்பெண் தாதியாக வந்து அவனுக்கு அறிமுகமாகியிருந்தாள்.


அவளை கோவைக்குச் சென்று அழைத்து வந்ததே அவன்தான். ஒவ்வொரு பெண்ணையும் அழைத்து வந்து திரும்பக் கூட்டிச் சென்று அவர்கள் ஊருக்கு அனுப்பி வைப்பது அவன் பொறுப்பு.


 இவளை அழைத்து வரும்போதே இனம் தெரியாத ஈர்ப்பில் இருவரும் நெருக்கமாகி விட்டனர்.


 அவனும் நல்ல பையன்தான். அழகனும் கூட. எந்த வகையிலும் குறை சொல்லும்படியாக இருக்க மாட்டான். நடிப்பிலும் கதை கவிதைகளிலும் நாட்டம் கொண்டவன்.


அந்த முகமதியப் பெண்ணை அழைத்து வந்த இரண்டாவது வாரத்தில் நண்பர்களான எங்களிடம் அவளைப் பிடித்திருப்பதாகச் சொன்னான். அதிலும் குறிப்பாக என்னிடம் எப்படி அவளை அணுகுவது என்று கேட்டான்.


 எனக்கு அதில் முன்னனுபவம் எல்லாம் கிடையாது. ஆனால் எந்த பிரச்சனைக்கும் என்னிடம் எளிதான தீர்வு கிடைக்கும் என்பது என் நெருங்கிய நண்பர்களின் நம்பிக்கை. 


இந்த விசயத்தில் அவனுக்கும் முன்னனுபவம் இல்லை. அதுதான் முதல் காதல்.


 நான் எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளைச் சொன்னேன். அவைகள் எல்லாம் உளவியல் சம்பந்தமானவை. 


 அதன்படி அடுத்த நாளே அவளின் முதுகில் சுட்டு விரல் நகத்தால் கீறி அவளைச் சிலிர்க்கச் செய்து விட்டான்.


 அதற்கடுத்த நாள் என்னைச் சந்தித்தபோது கை கொடுத்து மகிழ்ச்சியில் கட்டிக் கொண்டான். அவள் அன்றே அவனை ஏற்றுக் கொண்டாள்.


 இது நடந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. அப்போதுதான் அவளை நான் இருக்குமிடத்திற்கு அழைத்து வந்திருந்தான்.. !!


பொதுவாக எங்கள் நட்பில் யாருமே வாடா போடா நண்பர்கள் அல்ல. பெயர் சொல்லி இயல்பாக பேசிக்கொள்ளும் நண்பர்கள். ஆனால் மிக நெருக்கமான நண்பர்கள். 


"யாரு பாஷு இது?" நான் கேட்டேன்.


"சொல்லியிருக்கேன் இல்ல. அஸ்மா" என்றான்.


 அவனது இடது தோளில் தொங்கிய அவளின் பேகை கழற்றி வைத்து மூச்சு வாங்கினான். 


அவள் லேசாக வெட்கப்பட்டுச் சிரித்தாள். அவள் வேர்த்துப் பூத்துப் போய் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். புர்கா அணிந்திருந்தாள். தலையில் முக்காடு.


 அவளது பேகிலிருந்து அவன் தண்ணீர் கேனை எடுத்துக் கொடுத்தான்.


 அவள் வாங்கி கண்களை மூடிக்கொண்டு தண்ணீர் குடித்தாள். சின்னப் பெண்களைப்போல புட்டி விளிம்பில் வாய் வைத்துத்தான் தண்ணீர் குடித்தாள்.


 அது அவளுக்குக் கற்பிக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்று தோன்றியது. மத ரீதியாக கற்பிக்கப்படும் அறிவியல் உண்மை.!


 அவளுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தான்.


 என்னைப் பற்றி அவளிடம் முன்பே சொல்லியிருக்கிறான். நான் கொடுத்த ஊக்கத்தில்தான் துணிந்து அவளைக் காதலித்ததைக்கூட அவளிடம் சொல்லிவிட்டதை என்னிடமே சொல்லியிருந்தான். 


 அவள் என் கண்களைப் பார்த்து நட்புடன் சிரித்தாள்.


 அவள் பற்கள் சற்று பெரியவை. ஆனால் அது எந்த வகையிலும் அவள் அழகைக் குறைக்கவில்லை. பார்க்கப் போனால் அவளின் நீள முகத்தோற்றத்துக்கு அந்த பெரிய பற்கள்தான் கூடுதல் அழகாய் தெரிந்தது. 


அழகுக்கு குறைவில்லை. நல்ல நிறம் அவள். வெயில் பட்டால் ரத்தம் சுண்டிவிடும் போல தகதகக்கும் நிறம். சராசரி பெண்களைவிட சற்றுக் கூடுதல் உயரம். பெரிய கண்கள், கூரான மூக்கு, சிறிய உதடுகள், நீளக் கழுத்து, அவள் கொலுசு புதுசாக இருக்க வேண்டும். அடிக்கடி சப்தமிட்டுச் சிணுங்கியது.


 இன்று அவள் விடுப்பில் ஊருக்குச் செல்லக் கூடியவள். ஒரு மாதம் கழித்தே மீண்டும் வருவாளாம். புது தாதிப்பெண் நேற்றே வந்தாகிவிட்டது.  இவனும் உடல் நலமில்லை என்று பொய் சொல்லி விடுப்பெடுத்து அவளை இங்கே அழைத்து வந்து விட்டான். 


ஒரே அறைதான் என் வீடு. ஆனால் நீளமான, பெரிய அறை. கரண்ட் வசதி இல்லாததால் டிவி பேன் எதுவுமில்லை.


 பாய் தலையணை போர்வை ஒரு தண்ணீர் குடம். தவிர ஒரு பழைய டேபிள். 


சுவற்று முலையில் கட்டித் தொங்கவிடப்பட்ட உத்திரம். அல்லது பரண். அதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். 


அந்த பரணில் நிறைய புத்தகங்களும் நோட்டுக்களும் இருக்கும். 


அவள் அவைகளை எடுத்து கொஞ்சம் வாசித்துப் பார்த்தாள். ஆனால் வந்தது அதற்காக அல்ல என்பதால் பெயருக்கு இரண்டு புத்தகங்களை கையிலெடுத்துக் கொண்டு அவன் விரித்து விட்ட பாயில் வந்து உட்கார்ந்து கொண்டாள். 


சிறிது நேரத்தில் அவள் இயல்பாகி என்னுடன் நன்றாகவே பேசினாள். என்னைப் பற்றி விசாரித்து தன்னைப் பற்றிச் சொன்னாள்.


 அவள் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு மூன்று குழந்தைகள். அதில் இவள்தான் மூத்தவள்.


இவள் இந்த வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்களாகிறது. இவளுக்கு கீழே ஒரு தங்கை, தம்பி. 


தங்கை வேலைக்குச் செல்கிறாள். தம்பி இன்னும் படித்துக் கொண்டிருக்கிறான். அம்மாவும் வேலைக்குச் செல்வதால்தான் அவள் குடும்பம் ஓடுகிறது. அப்பாவின் ஆதரவு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அவர் இருப்பெல்லாம் இரணடாம் மனைவியுடன்தான். 


அன்று சரியாக காற்றுமில்லை என்பதால் சிறிது நேரத்தில் புர்காவைக் கழற்றிச் சுருட்டி பேகில் வைத்து விட்டாள்.


 உள்ளே அவள் இளஞ்சிவப்பில் ஒரு டாப்சும் மஞ்சள் லெக்கின்ஸும் போட்டிருந்தாள். மார்பில் போட்டிருந்த துப்பட்டாவால் அவ்வப்போது உதட்டுக்கு மேலே துடைத்துக் கொண்டிருந்தாள்.


 பால் நெற்றிதான் ஆனால் பார்க்க நிலாப்பிறையைப் பார்ப்பது போலிருந்தது. கண்ணுக்கு மையிட்டிருந்தாள். உதட்டுக்குக்கூட லேசாக லிப்ஸ்டிக் பூசியிருப்பது உற்றுப் பார்த்தபின்பே தெரிந்தது. 


கழுத்தில் ஒரு குட்டிச் செயின் போட்டிருந்தாள். அது பளபளத்து அவள் கழுத்துக்கு மிகவும் அழகு சேர்த்தது. தலையில் பூ வைத்திருந்தாள். மல்லியும் ரோஜாவும். அத்துடன் செண்ட்டும் அடித்திருக்கிறாள். அதன் மணம் வீட்டையே சுகந்தமாக்கிவிட்டது.


 கால் நீட்டி உட்கார்ந்து கொண்டாள். லெக்கின்ஸின் இறுக்கத்தில், நீளமான அவள் கால்கள் பெண்மை வடிவுடன் கவர்ச்சியாகவே இருந்தன.


 அவள் பக்கத்தில் நெருக்கமாக அவன். அவர்களின் தோள்களும் கால்களும் தொட்டுக் கொண்டிருந்தன. அவ்வப்போது அவன் கை அவள் தொடை மீதோ தோள் மீதோ விழுந்து கொண்டிருந்தது.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக